/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பிய நில எடுப்பு அதிகாரி!
/
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பிய நில எடுப்பு அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பிய நில எடுப்பு அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பிய நில எடுப்பு அதிகாரி!
PUBLISHED ON : பிப் 18, 2026 02:13 AM

கெ ட்டி சட்னியில் மெது வடையை புரட்டியபடியே, ''ஆவணங்கள் எல்லாம் மாயமாயிடுத்து ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை இருக்கோல்லியோ... இங்க, போன வருஷம், ஒரு மாணவியை, உதவி பேராசிரியர் ஒருத்தர் கர்ப்பமாக்கிட்டார் ஓய்...
''அதை கலைக்க நடந்த முயற்சியில், அந்த மாணவி இறந்துட்டா... இந்த வழக்குல பேராசிரியர் கைதாகி, சஸ்பெண்டும் ஆகிட்டார் ஓய்...
''அவர் பல்கலையில் பணியாற்றிய நேரத்துல, அவர் சம்பந்தப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்கள் எல்லாம், இப்ப காணாம போயிடுத்து... 'மாஜி உதவி பேராசிரியருக்கு, பல்கலை வட்டாரத்துல இன்னும் சிலர் உதவி பண்றாளோ'ன்னு ஊழியர்கள் சந்தேகப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ராஜேஷ்குமார், இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''வீரபாண்டி தொகுதியை தருவாரான்னு விவாதம் நடக்குதுங்க...'' என்றார்.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம்... அப்பவே, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துச்சுங்க...
''இதனால, பன்னீர்செல்வம் அணிக்கு போன செல்வம், அப்புறமா தினகரனின், அ.ம.மு.க.,வுக்கு போயிட்டாரு... இப்ப, அந்த கட்சியின் பொருளாளரா இருக்காருங்க...
''இப்ப, தே.ஜ., கூட்டணியில் பழனிசாமியும், தினகரனும் இருக்காங்களே... வர்ற தேர்தல்ல, வீரபாண்டி தொகுதியில் போட்டியிட செல்வம் விரும்புறாருங்க...
''ஆனா, 'இந்த தொகுதியை அ.ம.மு.க.,வுக்கு பழனிசாமி விட்டு தருவாரா அல்லது பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டு, தொகுதியை ஒதுக்காம செல்வத்தை பழி வாங்கிடுவாரா'ன்னு சேலம் அ.தி.மு.க.,வினர் விவாதிச்சிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லஞ்ச ஒழிப்பு போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்ல, 5,000 ஏக்கரில் பிரமாண்ட விமான நிலையம் கட்ட போறாங்கல்லா... இதுவரை, 1,500 ஏக்கர் நிலங்களை உரிமையாளர்களிடம் வாங்கி, 400 கோடி ரூபாய்க்கு மேல இழப்பீடு குடுத்திருக்காவ வே...
''இந்த இழப்பீடு தொகையை வழங்கும் தமிழக அரசின் நில எடுப்பு அதிகாரிகள், நில உரிமையாளர்களிடம் லட்சக்கணக்குல லஞ்சம் கேட்காவ... உரிமையாளர்களும் வேற வழியில்லாம, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய்னு குடுத்துடுதாவ வே...
''இது சம்பந்தமா, ரஞ்சித்குமார்னு ஒருத்தர் தந்த புகார்ல, சுந்தரவடிவேல் என்ற சர்வேயர், 50,000 ரூபாய் லஞ்சம் வாங்குறப்ப, சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டாரு...
''ஆனா, சர்வேயருக்கு மேல இருக்கிற அதிகாரி, 1 லட்சம் ரூபாய் கேட்டிருந்தாராம்... 'பணத்தை வாங்கிய சர்வேயர் சிக்கிட்டாரு... அதிகாரி தப்பிச்சிட்டாரு'ன்னு வருவாய் துறையினர் பேசிக்கிடுதாவ... அந்த அதிகாரிக்கு லஞ்சம் வாங்கி தர்றதுக்காகவே, நில எடுப்பு அலுவலகத்துல சில புரோக்கர்கள் சுத்தி சுத்தி வர்றாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ராமமூர்த்தி, நாளைக்கு பார்க்கலாம் பா...'' என, நண்பரிடம் விடைபெற்றபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

