PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:27 AM

''பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவங்க மேல, இன்னும் நடவடிக்கை எடுக்கலை வே...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''சென்னை, பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், 500 ஊழியர்கள் வேலை பார்க்காவ... இதுல, அரிசி கடத்திய வழக்கில் கைதாகி, ஜெயிலுக்கு போயிட்டு வந்த பாலாஜி என்பவர் உட்பட மூணு ஊழியர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களா இருக்காவ வே...
''இவங்க மீது துறைரீதியான வழக்குகள் இருக்கிறதால, அதை முடிக்கிற வரைக்கும் மூணு பேருக்கும் ரேஷன் கடை பணி வழங்க முடியாதுன்னு, மேலாண் இயக்குநரான உஷா கறாரா சொல்லிட்டாங்க... இதனால கடுப்பான மூணு பேரும், 'உஷா மீது ஆசிட் ஊத்துவோம்; கத்தியால குத்துவோம்'னு மிரட்டல் விடுத்திருக்காவ வே...
''இது சம்பந்தமா, வீடியோ ஆதாரங்களுடன் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல போன பிப்ரவரி மாசம் புகார் குடுத்தும், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை... இப்ப, 'பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, த.வெ.க., பணியாளர்கள் சங்கம் சார்பில், மறுபடியும் புகார் குடுத்திருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி,
''தலைவர் பதவியை பிடிக்க துடிக்கறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மாநில ஆணையம் ஒண்ணை உருவாக்கினா... இதன் தலைவரா, ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கறா ஓய்...
''இப்ப, இந்த ஆணையத்தின் தலைவர் பதவி காலியா இருக்கு... இந்த பதவியை பிடிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய புள்ளி ஒருத்தர் முயற்சி பண்றார்... இதனால, 'ஓய்வு பெற்ற நீதிபதியே ஆணைய தலைவரா இருக்க முடியும் என்ற விதியை திருத்துங்க'ன்னு, அமைச்சரவையில் இருக்கும் தன் நண்பருக்கு அழுத்தம் தந்துண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''சிந்தனைச்செல்வன் இருங்க... வன்னி அரசும் வரட்டும், சேர்ந்து போகலாம்...'' என நண்பரிடம் கூறிய அந்தோணிசாமி, ''ஜூனியர் அமைச்சரை அதிகாரிகள் புறக்கணிக்கிறாங்க... '' என்றபடியே தொடர்ந்தார்...
''தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையனும், கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவங்க... இதுல, ஈரோடு மாவட்ட பொறுப்பாளரா செங்கோட்டையனும், வேலுார் மாவட்ட பொறுப்பாளரா விஜய் பாலாஜியும் இருக்காங்க...
''மாவட்டத்துல, விஜய் பாலாஜி பெரிய ஆளாகிடக் கூடாதுன்னு செங்கோட்டையன் நினைக்கிறாரு... கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஏதாவது நிகழ்ச்சி நடத்தணும்னு செங்கோட்டையனிடம் போய் கேட்டா, 'சிம்பிளா அதிகாரிகளை வச்சு நடத்துங்க... அமைச்சர்கள் எல்லாம் வேண்டாம்'னு சொல்லிடுறாருங்க...
''அதே நேரம், பெரிய நிகழ்ச்சிகளா இருந்தா தனது கோபி தொகுதி மற்றும் அந்தியூர், பவானி தொகுதிகள்ல நடத்தி, தன் செல்வாக்கை செங்கோட்டையன் தக்க வச்சுக்கிறாருங்க...
''விஜய் பாலாஜி நிகழ்ச்சிகள்ல நாம கலந்துக்கிட்டா சிக்கலாகிடும்னு நினைக்கிற கலெக்டர் கந்தசாமி, டி.ஆர்.ஓ., சாந்தகுமாரை போகும்படி சொல்றாரு... அவரோ, தனக்கு கீழே இருக்கும் ஆர்.டி.ஓ., அந்தஸ்திலான அதிகாரிகளை அனுப்பிட்டு, தானும் நழுவிடுறாருங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி .
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
