PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

திருநெல்வேலி:மேலப்பாளையம் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது செய்யப்பட்டார்.
அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்ட கடந்த நவ.,16 அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். யாருக்கும் காயம் இல்லை. தியேட்டரில் சேதமும் இல்லை. முதலில் உள்ளூர் போலீசார் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விசாரித்து இருவரை கைது செய்தனர்.
பின் வழக்கு தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு எஸ்.பி.,ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் குழுவினர் மேலப்பாளையத்தில் விசாரித்தனர்.
அமரன் படத்திற்கு எதிராக சித்தாந்த அடிப்படையில் தீவிரவாத நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது, இதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட மேலப்பாளையம் அல்அமீன் நகரை சேர்ந்த இம்தியாஸ், 42, தலைமறைவாக இருந்தார்.
தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவர் மீது வேறு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் நேற்று துாத்துக்குடி மாவட்டம் ஆத்துாரில் கைது செய்தனர்.
குண்டுவீச்சு சம்பவத்தில் ஏற்கனவே, மேலப்பாளையம் செய்யது முகமது புகாரி, முகம்மது யூசுப் ரஷீன், கோலா பாதுஷா, சிராஜுதீன், நிசார் கைது செய்யப்பட்டனர்.
