PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
ஓசூர், டிச. 10-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், செட்டிப்பள்ளி காப்புக்காட்டில், ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி பகுதியில் நேற்று காலை நேரத்தில் விவசாய நிலங்களில் முகாமிட்டது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
விவசாய பயிர்களை நாசம் செய்த யானை, நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதி நோக்கி சென்றது. செட்டிப்பள்ளி காப்புக்காட்டில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலட்டி, கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, பாப்பனப்பள்ளி, பட்டா குருப்பரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்
துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனச்சரகம், தேவிரபெட்டா வனப்பகுதியில், 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. கும்ளாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம், அப்பகுதியிலுள்ள சங்கரண்ணா ஏரியில் நேற்று காலை, நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன. பின்னர் வனப்பகுதி நோக்கி சென்றன.
