மஞ்சள் நீர் கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
மஞ்சள் நீர் கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய் புத்தேரி பகுதியில் துவங்கி பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் காரணமாக வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் திருக்காலிமேடு சிறுபாலம் அருகில் குவியலாக உள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், மஞ்சள் நீர் கால்வாயில் செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் சூழல் உள்ளது.
எனவே, திருக்காலிமேடு சிறுபாலம் அருகில் குவியலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
