PUBLISHED ON : மார் 21, 2026 05:56 AM

வில்லிவாக்கம்: நீதிமன்ற உத்தரவின்படி, வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலையில், சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் அகற்றும் பணிகள் நேற்று நடந்தன.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார், தன் வீட்டு அருகில் உள்ள பொதுவழி மற்றும் அரசு சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாடி மேம்பாலத்தில் இருந்து, 80 மீ., நீளத்திற்கு அப்பகுதியில் 16 வீடுகள் மற்றும் எட்டு கடைகள், பொது வழியை ஆக்கிரமித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமே ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் '120பி' நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசமும் வழங்கினர். இதற்கிடையில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடங்களை காலி செய்யாததால், போலீசார் பாதுகாப்புடன் நேற்று சென்ற மாநகராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளில் மக்கள் வசித்து வந்ததால், அவற்றைத் தவிர்த்து, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக ஒன்பது கடைகள் இடித்து அகற்றப்பட்டன; மற்றவை விரைவில் இடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
