/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிகள், கான்ட்ராக்டர்களிடம் ஆளுங்கட்சியினர் வசூல்!
/
அதிகாரிகள், கான்ட்ராக்டர்களிடம் ஆளுங்கட்சியினர் வசூல்!
அதிகாரிகள், கான்ட்ராக்டர்களிடம் ஆளுங்கட்சியினர் வசூல்!
அதிகாரிகள், கான்ட்ராக்டர்களிடம் ஆளுங்கட்சியினர் வசூல்!
PUBLISHED ON : மார் 09, 2026 01:58 AM

''மொ பைல் போன்களை தராம இழுத்தடிக்கறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, பூக்கடை துணை கமிஷனர் ஆபீஸ் கட்டுப்பாட்டுல, 11 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இங்க, ஒன்றரை வருஷமா ஒரு அதிகாரி பணியில் இருக்கார் ஓய்...
''இந்த ஸ்டேஷன்கள் எல்லையில, மொபைல் போன்கள் வழிப்பறி மற்றும் திருட்டுகள் அதிகம் நடக்கறது... இதுல ஈடுபடறவாளை போலீசார் கைது பண்ணி, போன்களை பறிமுதல் பண்றா ஓய்...
''இப்படி, 300க்கும் மேற்பட்ட போன்களை பறிமுதல் பண்ணி, ஏழு மாசமா அதிகாரியே வச்சிருக்கார்... இவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்... இதனால, 'போன்கள்ல சார்ஜ் இறங்கி, ரிப்பேர் ஆகிடும்'னு உரிமையாளர்கள் புலம்பறா...
''அதிகாரி, சவுகார்பேட்டை பகுதியில நடக்கற தங்கம் திருட்டு வழக்குகள்ல காட்டற ஆர்வத்தை, பொதுமக்களிடம் போன்களை ஒப்படைக்கறதுல காட்ட மாட்டேங்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சுந்தரவடிவேலு, தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''கலெக்டர் மாற்றத்தின் பின்னணியை கேளுங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்த மாவட்டத்துல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, ஏழு மாசத்துக்கு முன்னாடி கலெக்டரா வந்தவங்க, சினேகா... நேர்மையான அதிகாரியான இவங்க, அரசியல்வாதிகளை, குறிப்பா, ஆளுங்கட்சியினரை மதிக்கிறது இல்லன்னு நிறைய புகார்கள் எழுந்துச்சு வே...
''இதனால, மாவட்ட ஆளுங்கட்சி முக்கிய புள்ளியும் இவங்க மீது அதிருப்தியில இருந்தாரு... 'தேர்தல் நேரத்துல, இவங்க இருந்தா ஆளுங்கட்சியினருக்கு குடைச்சல் குடுப்பாங்க'ன்னு கோட்டையில் இருக்கிற முக்கிய அதிகாரியிடம் போய் புலம்பியிருக்காரு வே...
''இதனால, சினேகாவை பக்கத்துல இருக்கிற காஞ்சிபுரத்துக்கு மாத்திட்டு, செங்கல்பட்டுல உதவி கலெக்டரா இருந்த மாலதி ஹெலனுக்கு கலெக்டர் பொறுப்பு குடுத்துட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''அன்பரசன், முருகானந்தம்கிட்ட பேசிட்டீங்களா பா... நீங்க கேட்டு, அவரால மறுக்க முடியுமா... சரி, அஞ்சு நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடுறேன்...'' என, பேசி வைத்தபடியே, ''துறை வாரியா வசூல்ல இறங்கிட்டாங்க பா...'' என்றார்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு சீக்கிரமே வெளியாக போகுதே... ஆளுங்கட்சியின் மாவட்ட முக்கிய புள்ளிகள் பலரும், பல துறைகளிலும் இருக்கிற தங்களது கட்சி மீது பற்றுள்ள அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை தொடர்பு கொண்டு பேசுறாங்க பா...
''அப்ப, 'மறுபடியும் நாமதான் ஆட்சிக்கு வர போறோம்... உங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருப்போம்... இப்ப, தேர்தல் செலவுக்கு ஒரு தொகையை வெட்டுங்க'ன்னு சில லட்சங்களை கேட்கிறாங்க பா...
''இதனால, 'இப்படி திடீர்னு கேட்டா, எப்படி குடுக்க முடியும்'னு அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் புலம்புறாங்க... ஆனாலும், தங்களால முடிஞ்ச தொகையை புரட்டி குடுத்துடுறாங்க பா...'' என முடித்தார் , அன்வர்பாய்.
அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.

