/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஊழியர்களை திட்டும் கரும்பு ஆலை அதிகாரி!
/
ஊழியர்களை திட்டும் கரும்பு ஆலை அதிகாரி!
PUBLISHED ON : ஜன 19, 2026 12:00 AM

நா ளிதழை மடித்தபடியே, ''ஆன்லைன்ல இறங்கிட்டாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''இப்ப எல்லாமே ஆன்லைன் தானே... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்ல, சேவல் சண்டை சூதாட்டத்தை, 'ஆன்லைன்' வழியாக ஒரு கும்பல் நடத்துது... அதாவது, சூதாடுறவங்களை, 'வாட்ஸாப்' குழுவுல சேர்த்து, ஒரு டோக்கனுக்கு, 100, 200 ரூபாய் வீதம், ஒரு ரவுண்டுக்கு, 40 முதல், 50 பேர் வரை, பணம் கட்ட சொல்லுதாவ வே...
''டோக்கன் குலுக்கல், சேவல் சண்டையை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் ஆன்லைனில் ஒளிபரப்புதாவ... ஜெயிக்கிறவங்களுக்கு பரிசு தொகை அல்லது சேவல்களை குடுத்துடுதாவ வே...
''கூட்டம் கூடாம, யாருக்கும் தெரியாம நடக்கிற, இந்த சேவல் சண்டை சூதாட்டம் சம்பந்தமா, எஸ்.பி.,க்கே பல புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்ல... இதனால, இதுக்கு போலீசாரும் உடந்தையான்னு சந்தேகம் வருது வே...'' என்றார், அண்ணாச்சி.
''விருந்தும், பரிசும் குடுத்திருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாருக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தென் மாவட்ட பெண் அமைச்சர், சட்டசபை தேர்தல் பணியில தீவிரமா களம் இறங்கிட்டாங்க... 'சமூக வலைதளங்கள் பிரசாரமும் முக்கியம்'னு, அவரது டாக்டர் மகன், தன் அம்மாவுக்கு ஆலோசனை குடுத்திருக்காருங்க...
''இதனால, மாவட்டத்தில் இருக்கிற, 'யு டியூப், இன்ஸ்டாகிராம்' போன்றவற்றில் பிரபலமா இருக்கிறவங்களை சமீபத்துல அழைச்சி, பிரபல ஹோட்டல்ல தடபுடலா விருந்து குடுத்திருக்காங்க...
''அப்ப, 'நான் கலந்துக்கிற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவறாம 'கவர்' செய்து பதிவிடுங்க... உங்களுக்கு எது வேணும்னாலும் கூச்சப்படாம கேளுங்க... என் மகன் செஞ்சு தருவார்'னு அமைச்சர் சொல்லியிருக்காங்க...
''விருந்தின் முடிவில், எல்லாருக்கும் அசத்தலான பரிசுகளும் குடுத்திருக்காங்க... ஆனா, சில, யு டியூபர்கள் மட்டுமே அமைச்சரது நிகழ்ச்சிகளை பதிவிட்டிருக்காங்க... எந்த கட்சியையும் சாராத நடுநிலை பார்வையாளர்கள் விலகிடுவாங்க என்ற பயத்தால, நிறைய யு டியூபர்கள் பின்வாங்கிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''கீதா மேடம்... 10 நிமிஷம் கழிச்சு பேசுறேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''ஒருமையில திட்டி கேவலப்படுத்துறாரு பா...'' என்றபடி தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், எறையூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒரு அதிகாரி இருக்காரு... தனக்கு கீழே வேலை பார்க்கும் கரும்பு இன்ஸ்பெக்டர், கரும்பு அலுவலர்கள்னு எல்லாரையும் ஒருமையில தான் பேசுறாரு பா...
''கரும்பு வளர்ச்சி அதிகாரியான இவர், அதை செய்யாம, தன் பொருளாதாரத்தை வளர்க்கிறதுல மட்டும் தான் குறியா இருக்காரு... கடந்த, 6 வருஷத்துக்கு முன்னாடி புதுவேட்டக்குடியில், இவர் கரும்பு அலுவலரா இருந்தப்ப, ஆலையில் இருந்து கரும்பு வெட்டும் கூலியா, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய, 18 லட்சம் ரூபாயை எடுத்து, பங்கு மார்க்கெட்டுல தன் பெயர்ல முதலீடு பண்ணிட்டா ரு பா...
''இதனால, அவரை சென்னைக்கு துாக்கியடிச்சாங்க... அப்புறமா, அந்த பணத்தை செலுத்தி மீண்டவர், சமீபத்துல தான் பெரம்பலுாருக்கு வந்தாரு... இவரை பத்தி, ஆலையின் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்யலாம்னு பார்த்தா, அவர் இவருக்கு மேல, எல்லாரையும், 'சோத்துல உப்பு போட்டு தான் தின்னுறியா'ன்னு திட்டுறாரு பா...'' என முடித்தார், அன் வர்பாய்.
''சுந்தர்ராஜன், பன்னீர்செல்வம் இங்கன உட்காருங்க...'' என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

