தேர்தலுக்கு முன்பாக தட்டி துாக்கிய பா.ஜ., அனைத்து கட்சிகளிலும் வீசுகிறது புயல்
தேர்தலுக்கு முன்பாக தட்டி துாக்கிய பா.ஜ., அனைத்து கட்சிகளிலும் வீசுகிறது புயல்
PUBLISHED ON : ஏப் 28, 2026 02:04 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியை பிடிக்க பா.ஜ., காய்நகர்த்தியது அனைத்து கட்சிகளிலும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., அ.தி.மு.க., ல.ஜ.க., ஒரு கூட்டணியாகவும், காங்.,- தி.மு.க., இ.கம்யூ., வி.சிறுத்தைகள் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.
மூன்றாவது அணியாக விஜயின் த.வெ.க.,வும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. த.வெ .க., இந்தமுறை வலுவாக வேட்பாளர்களை களம் இறக்கியது. இதனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருடைய ஓட்டு பிரிந்தது என்பதை கணிக்க முடியவில்லை என்று அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.
ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., எவ்வளவு ஜெயிக்கும் என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் மீண்டும் வர வேண்டும் என்பதில் பா.ஜ., உறுதியாக இருக்கின்றது.
தேர்தலில் எவ்வளவு சீட் ஜெயித்தாலும் பரவாயில்லை என்று சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., காய் நகர்த்தலை உஷாராக ஆரம்பித்து விட்டது. என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்க, திடீரென எண்ணிக்கை குறைந்தால் மற்ற எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அவசியம். இல்லையெனில் தனித்து ஆட்சி அமைக்கும் அரசியல் சூழல் ஏற்பட்டாலும் எம்.எல்.ஏ.,க்கள் கையில் இருப்பது அவசியம் என்பதால் பா.ஜ., தேர்தலுக்கு முன்பாக காய்நகர்த்தி விட்டது.
இதன்படி, வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சைகள், மற்ற கட்சி வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பாகவே செலவுக்கு பணம் கொடுத்து வலையில் வீழ்த்தி தட்டி துாக்கியுள்ளது. எனவே எப்படி இருந்தாலும் புதுச்சேரியில பா.ஜ., ஆட்சி தான் என்று தாமரை தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
