/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கிடப்பில் போடப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை!
/
கிடப்பில் போடப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை!
PUBLISHED ON : பிப் 20, 2026 03:07 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''வழக்குகளுக்காக வசூல் நடக்குது பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பத்திரப்பதிவு துறையில், ஒரு சார் - பதிவாளர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆனார்... அவர், தனக்கு மீண்டும் பதவி கேட்டு, கோர்ட்ல வழக்கு போட்டிருக்காரு பா...
''இந்த வழக்கில், பதிவுத்துறை ஐ.ஜி., பதில் அளிக்கும்படி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு... இந்த வழக்கில், பிற சார் - பதிவாளர்களையும் இணைக்க, அவங்க சங்கம் சார்புல ஒரு குழுவினர் வசூல் வேட்டையில் இறங்கிட்டாங்க பா...
''மொத்தம், 5 லட்சம் ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காங்க... மொபைல் போன் பண பரிவர்த்தனையான, 'ஜி பே' வாயிலா வசூல் நடக்கு... என்ன வழக்குன்னு கூட தெரியாம, பல சார் - பதிவாளர்கள் தலா, 50,000 ரூபாய் வரை அனுப்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஜெகதீசன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே, ''அதிருப்தியை சமாளிக்க போனவர், ஏமாற்றத்துடன் திரும்பிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியின் ஆளுங்கட்சி புள்ளி, கட்சியிலும் மாவட்ட பதவியில் இருக்காரு... இதுக்கு முன்னாடி மாவட்ட பதவியில் இருந்தவரும், இவரும் தனித்தனி கோஷ்டியா செயல் படுறாங்க...
''இந்த ரெண்டு பேருமே, வர்ற தேர்தல்ல சீட் கேட்டுட்டு இருக்காங்க... இவங்களுக்கு சீட் குடுத்தா, ஒருத்தர் காலை ஒருத்தர் வாரிடுவாங்கன்னு தலைமைக்கு தகவல் கிடைச்சதுங்க...
''இதனால, தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா, சமீபத்தில் தொகுதிக்கு வந்து, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாரு... அது முடிஞ்சதும், முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்ட புள்ளிகள் மற்றும் அவங்க ஆதரவாளர்களை தனி அறைக்குள்ள அழைச்சிட்டு போயிருக்காரு...
''அப்ப, முன்னாள் மாவட்ட புள்ளியின் ஆதரவாளர்கள், 'நாங்க யார் மீது புகார் சொல்ல வந்தோமோ, அவரை உங்க கூடவே உட்கார வச்சிருந்தா, நாங்க என்னத்தை பேசுறது'ன்னு சொல்லிட்டு, விருட்டுன்னு எழுந்து போயிட்டாங்க... இதனால, ராஜா ஏமாற்றத்துடன் திரும்பிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சந்திரன், பூபதி இதையும் கேட்டுட்டு கிளம்புங்க வே...'' என, நண்பர்களை இழுத்து பிடித்த பெரியசாமி அண்ணாச்சி, ''விசாரணை கமிஷன் முடிவு சிதம்பர ரகசியமா இருக்கு வே...'' என்றார்.
''எந்த விசாரணை கமிஷனை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சரா இருந்தவர், கோவையை சேர்ந்த வேலுமணி... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல முறைகேடு, டெண்டர்ல விதிமீறல்கள், அதிக விலைக்கு டெண்டர் விட்டதுன்னு வேலுமணி நிறைய முறைகேடுகள் பண்ணிட்டதா குற்றம்சாட்டினாவ வே...
''அதோட, இது சம்பந்தமா விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனும் போட்டாங்க... அந்த கமிஷனும் விசாரணையை முடிச்சு, அரசிடம் அறிக்கை கு டுத்துட்டு வே...
''ஆனா, கமிஷன் அறிக்கையை வெளியிடாம, தி.மு.க., அரசு கிடப்புல போட்டு வச்சிருக்கு... இதனால, 'தி.மு.க.,வுடன், அண்ணனுக்கு ரகசிய ஒப்பந்தம் ஏதும் இருக்குமோ 'ன்னு கொங்கு மண்டல அ.தி.மு.க.,வினரே பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

