/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'மம்மி'யை 'டம்மி'யாக்கி மாநகராட்சியை ஆளும் மகன்!
/
'மம்மி'யை 'டம்மி'யாக்கி மாநகராட்சியை ஆளும் மகன்!
'மம்மி'யை 'டம்மி'யாக்கி மாநகராட்சியை ஆளும் மகன்!
'மம்மி'யை 'டம்மி'யாக்கி மாநகராட்சியை ஆளும் மகன்!
PUBLISHED ON : ஜன 15, 2026 02:31 AM

பொ ங்கல் வாழ்த்துகளை உற்சாகத்துடன் பரிமாறிக் கொண்ட நண்பர்கள், குப்பண்ணா வழங்கிய சர்க்கரை பொங்கலை ருசித்து முடிக்கவும், சூடான மெது வடைகளுடன் நாயர் வந்தார்.
மெது வடையை கடித்தபடியே, ''எதையும் கண்டுக்காம இருக்காங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''ஆவின் தொழிலாளர்களுக்கு, 2023ல் இருந்து அகவிலைப்படி தொகை நிலுவையில இருக்கு... இந்த தொகையை வழங்க வலியுறுத்தி, ஆவின் அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், போன வாரம், சென்னை அம்பத்துார் ஆவின் பண்ணையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க பா...
''ஆனா, போராட்டத்துல ஈடுபட்டவங்களை அதிகாரிகள் கூப்பிட்டு பேசவே இல்ல... இதனால, வெறுத்து போயிருக்கிற தொழிலாளர்கள், அடுத்த போராட்டத்துக்கு தயாராகிறாங்க...
''ஏற்கனவே, அரசின் பல துறைகளின் ஊழியர்களும் போராட்டம் நடத்திட்டு வர்ற சூழல்ல, இவங்களும் களத்துல குதிச்சிட்டா, பால் சப்ளை பாதிக்கப்படும் பா...'' என்றார், அன்வர்பாய்.
''போலீசார் கைகளை கட்டி போட்டுட்டு, பெண் அதிகாரி மட்டும் புகுந்து விளையாடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, கானத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற பெண் அதிகாரி, சக போலீசாரிடம், 'யாரும் ஹோட்டல்கள்ல ஓசி சாப்பாடு, குடிநீர் பாட்டில் வாங்கக் கூடாது'ன்னு கண்டிப்பா உத்தரவு போட்டிருக்காங்க... இதை, எல்லா போலீசாரும் முறையா கடைப் பிடிக்கிறாங்க...
''கானத்துார்ல ஏராளமான தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால்கள், விளையாட்டு அரங்கங்கள் இருக்கு... இங்க எல்லாம், பெண் அதிகாரி, ஏகத்துக்கும் மாமூலை வாரி குவிக்கிறாங்க... இந்த ஸ்டேஷன்ல தினமும் ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டும் நிறைய வருமாம்... அதைக் கூட சக போலீசாருக்கு பகிர்ந்து கொடுக்காம, எல்லாத்தையும் பெண் அதிகாரியே எடுத்துட்டு போயிடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
தன் மொபைல் போனை பார்த்த பெரியசாமி அண்ணாச்சி, ''மகுடேஸ்வரி மிஸ்டு கால் இருக்கு... அப்புறம் பேசிக்கலாம்...'' என முணுமுணுத்தபடியே, ''அம்மாவை டம்மியாக்கிட்டு, மகன் புகுந்து விளையாடுதாரு வே...'' என்றார்.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கடலுார் மாநகராட்சி தலைமை பதவியில், தி.மு.க.,வைச் சேர்ந்த பெண்மணி தான் இருக்காங்க... ஆனா, அவங்க வேலையை, அவங்களது இளைய மகன் தான் பார்த்துக்கிடு தாரு வே...
''அம்மா பொம்மை மாதிரி பதவியில் உட்கார்ந்திருக்காங்க... மகன் தான், தற்காலிக வேலைக்கு ஊழியர்களை நியமிக்கிறது, யாருக்கு 'டெண்டர்' தரணும்னு எல்லாத்தையும் முடிவு பண்ணுதாரு... மாநகராட்சி பெண் ஊழியர்களை அழைச்சி, ஆலோசனை கூட்டங்களை கூட மகன் தான் நடத்துதாரு வே...
''இதனால, கடலுார் மாநகராட்சியை நிர்வாகம் பண்றது, அம்மாவா, மகனான்னு தெரியாம மக்கள் புலம்புதாவ...
''இது சம்பந்தமா, மாவட்ட அமைச்சரான பன்னீர்செல்வம் மற்றும் முதல்வருக்கு நிறைய புகார்கள் போயிருக்கு... 'அவங்க தலையிட்டு நடவடிக்கை எடுக்கலைன்னா, தேர்தல்ல தி.மு.க.,வுக்கு கடும் பின்னடைவு ஏற்படும்'னு, தி.மு.க.,வினரே சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சுந்தரி மேடமா... பாலாஜி அங்க இருக்காரா...'' என பேசியபடியே நடக்க, மற் றவர்களும் எழுந்தனர்.

