/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சட்டவிரோத குவாரிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!
/
சட்டவிரோத குவாரிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!
சட்டவிரோத குவாரிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!
சட்டவிரோத குவாரிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!
PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

பில்டர் காபியை டபராவில் ஆற்றியபடியே, ''தேர்வுகள்ல குளறுபடி நடக்கறது ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொலைதுார கல்வி மையம், நீலகிரி மாவட்டம், கூடலுாரில் செயல்படறது... இந்த மையத்தை ஒரு ஆசிரியரும், அரசு கல்லுாரி ஊழியர் ஒருத்தரும் சேர்ந்து, 'பினாமி' பெயர்ல நடத்தறா ஓய்...
''இங்க நடக்கற செமஸ்டர் தேர்வுகள்ல பல கோல்மால்கள் நடக்கறது... அதாவது, கூடலுார் அரசு கல்லுாரியில் நடத்த வேண்டிய செமஸ்டர் தேர்வை, தனியார் பள்ளியில் நடத்தியிருக்கா ஓய்...
''ஹால் டிக்கெட்ல, கடைசி நேரத்துல, சென்டரை மாத்தியிருக்கா... இது பத்தி, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு பல புகார்கள் போயும் எந்த நடவடிக்கையும் இல்ல... 'இந்த தொலைதுார கல்வி மையத்துல, உயர் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா, நிறைய முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்'னு கல்வியாளர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மணி, பிரதீஷ் உட்கார இடம் குடுங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''சரிசமமா தண்ணீரை நிரப்பணும்னு கேட்காவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்.
''எங்கங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்ல, 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேத்தி இருக்காங்கல்லா...
''இதுல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரிந்துரைப்படி, அவரது ஈரோடு மாவட்டத்துல இருக்கிற குளம், குட்டைகளுக்கு மட்டும் தொடர்ச்சியா அதிகாரிகள் நீர் வினியோகம் பண்ணுதாவ வே...
''அதே நேரம், 'கோவை, திருப்பூர் மாவட்ட எல்லைகள்ல இருக்கிற குளம், குட்டைகளுக்கு சரியா தண்ணீர் அனுப்புறது இல்ல'ன்னு விவசாயிகள் புலம்புதாவ... 'எல்லா குளம், குட்டைகள்லயும் சரிசமமா தண்ணீர் நிரப்பணும்' னும் கேட்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கரூர், சேலம், நாமக்கல், பெரம்பலுார் மாவட்டங்கள்ல அரசு அனுமதி பெறாம, 100க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்குது...
''இந்த சட்டவிரோத குவாரிகள் மற்றும் கிரஷர்கள்ல இருந்து வெளியே போகும் கனிமங்களுக்கு, எந்த கணக்கு வழக்கும் இல்ல பா...
''கிட்டத்தட்ட மூணு வருஷமா இயங்கும் இந்த குவாரிகளால, குத்தகை தொகை மற்றும் வரி வருவாய்னு, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கு... இதுக்கு இடையில, கனிமங்களுக்கான வரிகளை உயர்த்தி, ரெண்டு அரசாணைகளை வெளியிட்டாங்க பா...
''அந்த அரசாணைகள்ல, கனிமங்களுக்கு கனமீட்டர் மற்றும் டன் அளவுல அறிவியல்பூர்வமா வரிகளை கணக்கீடு செய்யாம, பொத்தாம் பொதுவா, 150 சதவீதம் உயர்த்திட்டாங்க... இந்த வரி உயர்வால, சட்டவிரோத குவாரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்ல பா...
''ஆனா, நேர்மையா குவாரி தொழில் பண்றவங்களும், அவங்களிடம் மண், ஜல்லி வாங்குற நடுத்தர மக்களும் தான் கடுமையா பாதிக்கப்படுறாங்க... 'அடுத்த வருஷம் தேர்தல் வர்றதால, கனிமங்களுக்கான வரி உயர்வை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்'னு பலரும் மனு அனுப்பி இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.

