/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலி ஆவணத்தில் வங்கி கடன் ரூ.60 லட்சம் சுருட்டிய மூவர் கைது
/
போலி ஆவணத்தில் வங்கி கடன் ரூ.60 லட்சம் சுருட்டிய மூவர் கைது
போலி ஆவணத்தில் வங்கி கடன் ரூ.60 லட்சம் சுருட்டிய மூவர் கைது
போலி ஆவணத்தில் வங்கி கடன் ரூ.60 லட்சம் சுருட்டிய மூவர் கைது
PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

சென்னை, தனியார் வங்கியில், போலி ஆவணம் வாயிலாக, 60 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வங்கி தொடர்பு மேலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
போரூரைச் சேர்ந்தவர் கிலியன் குமார், 35. இவர், அமைந்தகரையில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமுதா கிருஷ்ணன், 42, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 47, ஆகியோர், வங்கி தொடர்பு மேலாளர் யாசர் அராபத் என்பவரை அணுகி, கனரக வாகனம் வாங்க தொழில் கடனுக்கு விண்ணப்பித்தனர்.
அதேபோல், ஜாகிர் அலி என்பவரும், தொழில் கடன் வேண்டி விண்ணப்பித்து இருந்தார். இருவரும், கடந்த 2024 செப்டம்பரில், தலா 30 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெற்றனர். பின், இருவரும் கடன் தொகையை முறையாக செலுத்தாமல் அலைக்கழித்து வந்தனர்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் போலி ஆவணம் சமர்ப்பித்து, தொடர்பு மேலாளர் யாசர் அராபத் உதவியுடன் தொழில் கடன் பெற்று, மோசடி செய்தது தெரியவந்தது.
எனவே, போலி ஆவணம் சமர்ப்பித்து, மோசடியில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி தொடர்பு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட, குமுதா கிருஷ்ணன், வங்கி தொடர்பு மேலாளர் யாசர் அராபத், ராதா கிருஷ்ணன் ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர். வழக்கில் தொடர்புள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.