/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சர் நேரு மீதான புகாரால் நடுக்கத்தில் மூவர் அணி!
/
அமைச்சர் நேரு மீதான புகாரால் நடுக்கத்தில் மூவர் அணி!
அமைச்சர் நேரு மீதான புகாரால் நடுக்கத்தில் மூவர் அணி!
அமைச்சர் நேரு மீதான புகாரால் நடுக்கத்தில் மூவர் அணி!
PUBLISHED ON : டிச 14, 2025 03:17 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''மாவட்ட பதவி வேண்டாம்னு பெருந்தன்மையா சொல்லிட்டு, மாநில பதவிக்கு அடி போட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழக காங்கிரஸ்ல, மாவட்ட தலைவர்கள் பதவிக்கு தேர்தல் நடக்குதே... திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்., தலைவர் செங்கம் குமார், 10 வருஷங்களுக்கு மேல, இந்த பதவியில் இருந்தாருங்க...
''இந்த முறை, 'இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பல'ன்னு, மேலிட தேர்தல் பார்வையாளரிடம் கடிதமே எழுதி குடுத்துட்டாரு... அதே கடிதத்துல, 'முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி தலைமையில், சிறப்பா பணியாற்றி இருக்கேன்... அதனால, மாநில அளவில் ஏதாவது பதவி தந்தால், சிறப்பா செயல்படுவேன்'னும் கோரிக்கை வச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நிர்வாகத்துல தலையிடுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி தலைவரா, ஆளும் கட்சியை சேர்ந்த பெண்மணியும், துணை தலைவரா, நகர தி.மு.க., புள்ளியும் இருக்காங்க... சில வருஷங்களுக்கு முன்னாடி, பேரூராட்சி துாய்மை பணியாளர் ஒருத்தர் தற்கொலை செஞ்சுக்கிட்ட வழக்கில், தலைவர், அவங்க மாமியார் மேல இன்னும் வழக்கு நடக்குது பா...
''நிர்வாகத்துல நடக்கிற முறைகேடுகள் சம்பந்தமா, துணை தலைவர் அடிக்கடி கேள்வி எழுப்பியதால, அவரை பதவியில் இருந்து நீக்க, தலைவர் தரப்புல முயற்சி எடுத்தாங்க... கட்சி தலைமை தலையிட்டதால, அந்த முடிவை கை விட்டுட்டாங்க பா...
''சமீபகாலமா, பேரூராட்சி நிர்வாகத்துல மாமியார் தலையீடு அதிகமா இருக்கு... மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், இதை கண்டுக்கல... இது சம்பந்தமா, கட்சி மேலிடத்துக்கு துணை தலைவர் புகார் அனுப்பியிருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே, ஒலித்த மொபைல் போனை எடுத்து, ''ஹீமைரா, ஆயிஷா எல்லாம் வந்துட்டாங்களா... நானும், ராஜேஷும், 10 நிமிஷத்துல வந்துடுவோம்...'' எனக் கூறி வைத்தார்.
''அமைச்சரை விட அதிக பீதியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருவே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.
''தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் பண்ணிட்டதா, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருக்கோல்லியோ... இதனால, அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் இருவர் உட்பட, மூணு பேர் பீதியில இருக்கா ஓய்...
''இதுல ரெண்டு பேர், ஆளும் கட்சியில் ஒன்றிய பதவியில இருக்கா... இன்னொருத்தர் பத்திரிகையாளர்... நேரு ஊழல் சம்பந்தமா, டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள்ல, இந்த மூணு பேரின் பெயர்களும் இருக்காம் ஓய்...
''இந்த மூணு பேரும், தங்களது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு, 'டூர்' போய், நிறைய முதலீடுகளை பண்ணிட்டு வந்திருக்காளாம்... இதனால, 'நம்மையும் அமலாக்கத்துறை கம்பி எண்ண வச்சிடுமோ'ன்னு அவாள்லாம் பயந்து நடுங்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வாங்க, சீனிவாசன்... கருப்பையாவும், ராஜசேகரும் உங்களை தேடிட்டு இருந்தாங்களே... இப்பதான் கிளம்பினாங்க...'' என, நண்பரிடம் கூறியபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

