PUBLISHED ON : மே 08, 2026 12:35 AM

''அ திகாரிகளை ஒரு மணி நேரம் காத்திருக்க வச்சுட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வா ஜெயிச்சிருக்கிறவர், கருப்பையா... அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவருக்கு இந்த முறை, 'சீட்' தராததால, விஜய் கட்சியில சேர்ந்து, மறுநாளே வேட்பாளரா அறிவிக்கப்பட்டாருங்க...
''தேர்தல்லயும் பெருசா எந்த செலவும் செய்யல... எங்க ஜெயிக்க போறோம்னு, ஓட்டு எண்ணிக்கையிலும் ஆர்வம் காட்டாம தான் இருந்தாரு... ஆனாலும், விஜய் அலையில ஜெயிச்சிட்டாருங்க...
''வெற்றி சான்றிதழ் வாங்க வந்தவரிடம், 'தேர்தல் கமிஷனுக்கு உங்க படத்துடன் சான்றிதழ் அனுப்பணும்... போட்டோ தாங்க'ன்னு அதிகாரிகள் கேட்டிருக்காங்க... அவரோ, 'வீட்டுல இருக்கு... எடுத்துட்டு வர சொல்றேன்'னு ஆட்களை அனுப்பினாருங்க...
''கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதிகாரிகள் காத்து கிடந்தாங்க... ஒருவழியா போட்டோவை குடுத்து, சான்றிதழை வாங்கிட்டு போனாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நிறைய பணத்தை வாரி விட்டுண்டு தவிக்கறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கரூரை சேர்ந்த தி.மு.க., 'மாஜி' அமைச்சர், இந்த முறை கோவை மாவட்டத்தில் போட்டியிட்டாரோல்லியோ... பலமா அடிச்ச விஜய் அலையிலும், தட்டு தடுமாறி ஜெயிச்சுட்டார் ஓய்...
''ஆனா, இவர் பொறுப்பு வகித்த கோவை மாவட்டம் மற்றும் தன்னோட சொந்த மாவட்டமான கரூர்ல, பல நுாறு கோடி ரூபாயை தேர்தலுக்காக அள்ளி விட்டிருக்கார்... கரூர்ல ஓட்டுக்கு 6,000 ரூபாய், தங்க மூக்குத்தி எல்லாம் குடுத்தால்லியோ... எல்லாமே இவரது பணம் தான் ஓய்...
''கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்... போட்டதை எல்லாம் எடுத்துடலாம்னு நம்பிக்கையா இருந்திருக்கார்... இதனாலயே, கோவை தொழிலதிபர்கள் சிலர், தேர்தல் நிதி தர முன்வந்தும், வேண்டாம்னு மறுத்துட்டாராம்... இப்ப, நிறைய பணத்தை இழந்துட்டு நொந்து போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செந்தில் பாலாஜி, இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''உதவியாளரால தோற்றவர் கதையை கேளுங்க வே...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தி.மு.க., இளைஞர் அணி செயலரான உதயநிதியின் நண்பர் மகேஷ், பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சரா இருந்தாருல்லா... இவர் திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர்கிட்ட தோத்து போயிட்டாரு... 'இதுக்கு, அவரது உதவியாளரும், உதவியின் உறவினரான தி.மு.க., நிர்வாகி ஒருத்தரின் செயல்பாடுகள் தான் காரணம்'னு அந்த கட்சியினரே சொல்லுதாவ வே...
''அந்த உதவியாளர், கட்சி அலுவலகம் வர்ற மூத்த நிர்வாகிகளை கூட பேர் சொல்லி, ஒருமையில தான் பேசுவாரு... அவங்களை நிற்க வச்சே பேசி அனுப்பிடுவாரு வே...
''அதேபோல, உதவியாளரின் உறவினரும், அமைச்சர் பெயரை பயன்படுத்தி, அஞ்சு வருஷத்துல நிறைய சம்பாதிச்சுட்டாராம்... 'இதெல்லாம் மகேஷ் காதுக்கு வந்தும், அவர் எதையும் கண்டுக்காம இருந்துட்டாரு... இதனாலயே, அவர் தோத்து போயிட்டார்'னு கட்சி நிர்வாகிகள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அருண், மதிவாணன் இப்படி உட்காருங்கோ... நாங்க கிளம்பறோம்...''என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
