/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாவட்ட நிர்வாகிகள் இல்லாமல் தள்ளாடும் விஜய் கட்சி!
/
மாவட்ட நிர்வாகிகள் இல்லாமல் தள்ளாடும் விஜய் கட்சி!
மாவட்ட நிர்வாகிகள் இல்லாமல் தள்ளாடும் விஜய் கட்சி!
மாவட்ட நிர்வாகிகள் இல்லாமல் தள்ளாடும் விஜய் கட்சி!
PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

நண்பர்கள் நடுவில் அமர்ந்தபடியே, ''கிட்டத்தட்ட நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை, ஒருத்தர் தலையிலயே கட்டுறாங்க பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஆவின்ல தான்... தமிழகத்தில், 27 ஆவின் ஒன்றியங்கள் இருக்கு... பெரும்பாலான ஒன்றியங்கள்ல காலி பணியிடங்களை நிரப்பாம, இருக்கிற ஊழியர்கள் தலையிலயே எல்லா வேலையையும் கட்டுறாங்க பா...
''ஊழியர்கள் சலிச்சுக்கிட்டா, 'ஆவின் நிதி நிலைமை மோசமா இருக்கு... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க'ன்னு உயர் அதிகாரிகள் கெஞ்சாத குறையா கேட்கிறாங்க பா...
''அதே நேரம், 'நிறைய நேரம் வேலை செய்றோம்... நிறைய பொருட்கள் விற்பனை ஆகுது... அப்படியிருந்தும், நஷ்டத்துல ஓடுதுன்னு சொன்னா என்ன அர்த்தம்... அதுவும் இல்லாம, எல்லா சலுகைகளும், சென்னை ஆவின் இணையத்துல இருக்குற அதிகாரிகளுக்கே போயிடுது... நாங்க தான் கிடந்து கஷ்டப்படுறோம்'னு ஒன்றியங்கள்ல இருக்கிற ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பிரச்னைக்குரிய நிலங்களை வளைச்சு போடறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்கள்ல, வாரிசு தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமா, பல ஏக்கர் பட்டா நிலங்கள் சும்மாவே கிடக்கு... சட்ட சிக்கல்கள், குடும்ப பிரச்னைகளால அதை விற்கவும் முடியாம, பயன்படுத்தவும் முடியாம பலர் தவிக்கறா ஓய்...
''இந்த மாதிரியான இடங்களின் உரிமையாளர்களை ஆளுங்கட்சி புள்ளி ஒருத்தர் சந்திக்கறார்... தன்னை தி.மு.க., செய்தி தொடர்பாளர்னு சொல்லிக்கறார் ஓய்...
''அப்ப, அந்த நிலங்களை வித்து தரதா சொல்லி, ஒரு தொகையை அட்வான்சா குடுத்துடறார்... நிலத்தை விற்பனை பண்றப்ப முழு தொகையும் தரதா சொல்றார்... இதை நம்பி, பலரும் சொத்து ஆவணங்களை அவரிடம் துாக்கி குடுத்துடறா ஓய்...
''தி.மு.க., புள்ளி, இதுக்காகவே, கடந்த சில மாதங்களா பூண்டி யில் ஒரு நட்சத்திர ஹோட்டல்ல அறை எடுத்து தங்கியிருக்கார்... நிஜமாகவே நிலத்தை வித்து குடுப்பாராங்கறது தான் மில்லியன் டாலர் கேள்வி ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அரசகுமார், இங்கன உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''ஆளாளுக்கு நாட்டாமை பண்ணிட்டு திரியுதாவ வே...'' என்றார்.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நடிகர் விஜயின், த.வெ.க.,வுக்கு மாநிலம் முழுக்க நிர்வாகிகளை நியமிச்சுட்டாங்க... ஆனா, துாத்துக்குடிக்கு மட்டும் மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரையும் நியமிக்கல வே...
''இதனால, விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவங்க, மாற்று கட்சியில் இருந்து வந்தவங்க, புதுசா கட்சிக்கு வந்தவங்கன்னு ஆளாளுக்கு, 'நாங்க தான் மாவட்ட பொறுப்பாளர்'னு சொல்லிட்டு, நிறைய பணத்தை செலவழிச்சு, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துதாவ... விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாருடன் சேர்ந்து கட்சி பணிகளை செய்றதுன்னு தெரியாம தவிக்காவ... 'சீக்கிரமா மாவட்ட நிர்வாகிகளை நியமிங்க'ன்னு தலைமைக்கு தகவல் குடுத்தும், யாரும் கண்டுக்கல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.