' ரீல்ஸ் ' கும்பலுக்கு கடிவாளம் போடுவாரா அமைச்சர்?
' ரீல்ஸ் ' கும்பலுக்கு கடிவாளம் போடுவாரா அமைச்சர்?
PUBLISHED ON : ஆக 20, 2026 12:37 AM

மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த அன்வர்பாய், “என்னை வீட்டுக்கு அனுப்ப பார்க்கிறாங்கன்னு புலம்புறாரு பா...” என்றார்.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரா இருக்கிறவர் விக்னேஷ்... இவர், மதுபான நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில், 'கட்டிங்' வாங்கிட்டதா தகவல்கள் பரவுச்சு பா...
“ஆனா, கட்சி நிதி வசூல் நிறுத்தம், தனியார் மதுபான ஆலைகள்ல ஆய்வு, பிற மாநில மதுபானங்கள் கொள்முதலுக்கு அனுமதின்னு, தன் அதிரடி நடவடிக்கைகளால பாதிக்கப்பட்ட மதுபான ஆலை உரிமையாளர்கள் தான், இப்படி பொய் தகவல்களை பரப்புறதா அமைச்சர் சொல்றாரு பா...
“அதோட, 'முதல்வர், ரெண்டு அமைச்சர்கள்னு மூணு பேர், என் துறையை கண்கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருக்காங்க... அவங்களை மீறி நான் தப்பு பண்ண முடியுமா'ன்னும், புலம்புறாரு பா...” என்றார் அன்வர்பாய்.
“ரீல்ஸ் கும்பல் அட்டகாசம் தாங்க முடியல ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்... மாவட்டத்துல, இவர் எந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாலும், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு வந்துடும் ஓய்...
“இது தவிர, அமைச்சர் நிகழ்ச்சிகளை, 'ரீல்ஸ்' எடுக்கவே, அவரது ஆதரவாளர்கள் கூட்டம் தனியா போறது... சமீபத்துல, அறந்தாங்கி தொகுதியில் இருக்கிற மணமேல்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அமைச்சர் போயிருந்தார் ஓய்...
“நிகழ்ச்சி முடிஞ்சதும், அங்க வந்த நிறைய பெண்கள், தங்களது கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு அமைச்சரிடம் மனு குடுத்தாங்க... அதை வாங்கியவர், '50 வருஷங்களா இருந்தவங்க செய்யல... நாங்க வந்து 50 நாள் தான் ஆகுது... ஆனாலும் செஞ்சு தர்றோம்'னு, சொன்னதை பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்தா ஓய்...
“இதை பார்த்த புதுக்கோட்டை மாநகர த.வெ.க., நிர்வாகி ஒருத்தர், 'அமைச்சர் பேசுறதை எல்லாம் வீடியோ எடுக்கக்கூடாது'ன்னு சொல்லி, கேமராவை தட்டி விட்டுட்டார்... இதே நிர்வாகி, அதுக்கு முன்னாடி அமைச்சரின் அண்ணன் முகமது இப்ராகிம், புதுக்கோட்டை மாநகராட்சியில் ஆய்வு நடத்தியதா ரீல்ஸ் போட்டு, சர்ச்சையை கிளப்பிட்டார் ஓய்...
“இதனால, 'இந்த ரீல்ஸ் கும்பலை அமைச்சர் அடக்கி வைக்கணும்... இல்லேன்னா அவருக்கு தான் கெட்ட பெயர்'னு, தொகுதி மக்கள் சொல்றா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“சந்தோஷ்குமார், கிளம்பலாமா பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
