PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வகை 2 நீரிழிவு குறைபாடு இருப்பதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். இது பொதுவாக உடலில் போதுமான இன்சுலின் சுரப்பு இல்லாததால் ஏற்படுகிறது. இதை எவ்வளவு முன்கூட்டியே கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. வகை 2 நீரிழிவு குறைபாட்டை எளிதாகக் கண்டறியும் முறையை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள க்ளிக்ஸ் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் மனிதர்களின் குரலை வைத்தே நீரிழிவு இருப்பதைக் கண்டறியும் வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இதன்படி நாம் பேசும்போது ஏற்படும் ஸ்தாயி (Voice pitch) மாறுபாட்டைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இயங்கும் செல்போன் செயலி ஆராய்ந்து முடிவைச் சொல்லும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது குரல் வளையில் ஏற்படும் அழுத்தம் இந்த மாறுபாட்டை உருவாக்கும் என்ற அனுமானமே ஆய்வின் அடிப்படை. ஆய்வாளர்கள் 505 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் 174 நீரிழிவு நோய் உள்ளவர்கள், 242 பேர் நோய் இல்லாதவர்கள், 89 பேர் நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள். இவர்களை அமைதியான சூழலில் அமர்த்தி 2 வாரங்கள் தொடர்ந்து தினமும் 6 முறை குரலைப் பதிவு செய்தனர். மற்றொரு புறம் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தனர்.
இந்த ஆய்வு முடிவில் ரத்த சர்க்கரை அளவுக்கும் குரல் மாறுபாட்டிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, விரைவில் மேம்படுத்தப்பட்ட புது முறையிலான ரத்த சர்க்கரை கண்டறியும் வழிமுறை அறிமுகமாகும்.