/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கதிர்வீச்சுக்கே சவால்விடும் புழு
/
கதிர்வீச்சுக்கே சவால்விடும் புழு
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

'செர்னோபில் விபத்து' என்பது 1986ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் என்கின்ற இடத்தில் இருந்த அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தாகும். திடீரென ஏற்பட்ட கோளாறால் எதிர்பாராத விதமாக அணு உலையின் பல பகுதிகள் சிதைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு பரவியது. கிழக்கே ரஷ்யாவில் துவங்கி மேற்கே இத்தாலி, பிரான்ஸ் வரை கதிர்வீச்சு பரவியது. இதனால் ஏராளமான மக்கள், கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விலங்குகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டது.
இவ்வளவு கொடிய கதிர்வீச்சிலும் கூட கொஞ்சம் கூட பாதிக்கப்படாத புழு ஒன்றை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அணு உலையைச் சுற்றி 30 கிலோமீட்டர் துாரம் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்தப் புழுக்களுக்கு மட்டும் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரியப் பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு அணுஉலை அமைந்துள்ள கதிர் இயக்கப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நெமெடோட்ஸ் (Nematodes) எனும் இந்த நுண் புழுக்களைச் சேகரித்தார்கள். இவற்றுடன் வேறு பகுதியில் வாழ்ந்த இதே புழுக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவற்றின் மரபணு ஒன்று போலவே இருந்தது தெரிய வந்தது.
இவை விரைவாக இனப்பெருக்கம் செய்வதாலும், குறைவான ஆயுளைக் கொண்டிருப்பதாலும் மரபணு குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டு ஆரோக்கியமாக மாறி இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். கதிர்வீச்சுகளைத் தாங்குகின்ற அளவு ஆற்றல் பெற்றுள்ள இந்தப் புழுக்களை ஆராய்வதன் மூலமாக மனிதர்கள், விலங்குகளில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிய முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

