PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

பல்லாயிரம் டன் நெகிழிக் குப்பைகள் ஆண்டுதோறும் கடலுக்குள் கொட்டப்படுகின்றன. இவை எளிதில் மக்குவது இல்லை. இதனால், கடல் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. எளிதாக மக்கக்கூடிய வகையிலான நெகிழிகளை உருவாக்குவதற்கு நீண்ட காலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
1800களிலிருந்தே பயன்பாட்டில் இருப்பது சி.டி.ஏ (செல்லுலோஸ் டைஆசிடேட்). இது தாவரத்தின் செல் சுவர்களில் இருந்து எடுக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இது உள்ளது. கொஞ்சம் தாமதம் ஆனாலும் கூட கடலில் மக்கிவிடும். இதில் சில மாற்றங்களைச் செய்வதன் வாயிலாக இன்னும் விரைவாக மக்கச் செய்ய முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டபிள்யூஹச்ஓஐ (WHOI) பல்கலை கண்டறிந்துள்ளது.
இந்தப் புதிய சி.டி.ஏ.,வைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகள் பழைய சி.டி.ஏ., பைகளை விட 15 மடங்கு வேகமாக மக்குகின்றன. அதாவது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை விட வேகமாக மக்குகின்றன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

