/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
வயதுக்கு மீறி வளர்ந்த கருந்துளைகள்
/
வயதுக்கு மீறி வளர்ந்த கருந்துளைகள்
PUBLISHED ON : ஜன 29, 2026 07:29 AM

விண்ணியற்பியலில் விடைதெரியாத ஒரு புதிர் உண்டு. நம் பிரபஞ்சத்தில் கருந்துளைகள் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி அசுர வளர்ச்சி அடைந்தன? பெரு வெடிப்பு நிகழ்ந்து வெறும் 70 கோடி ஆண்டுகளுக்குள்ளேயே, சில கருந்துளைகள், சூரியனைப் போல பல கோடி மடங்கு நிறை கொண்டவையாக உருவெடுத்துள்ளன.
பாரம்பரிய கோட்பாடுகளின்படி, இவ்வளவு வேகமான வளர்ச்சி சாத்தியமற்றது எனக் கருதப்பட்டது.
இந்த நிலையில், புதிய ஆய்வுகள் இப்புதிருக்கு ஒரு விடையை முன்வைத் து உள்ளன. கணினி மாதிரிகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகள், இதற்கு ஒரு சுவையான விளக்கத்தை அளிக்கின்றன. துவக்க கால அண்டங்களில் நிலவிய அடர்த்தியான மற்றும் கொந்தளிப்பான வாயு மண்டலங்கள் இதற்கு முக்கியக் காரணம் .
இத்தகைய சூழலில், கருந்துளைகள் தங்களைச் சுற்றியுள்ள பருப்பொருட்களை மிக வேகமாக விழுங்குகின்றன.
வழக்கமாக கருந்துளையின் வளர்ச்சியை மந்தப்படுத்தும் கதிர்வீச்சு அழுத்தத்தை விட, உள்ளிழுக்கப்படும் வாயுவின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த அதீத வளர்ச்சி சாத்தியமாகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆய்வு, விநோதமான அல்லது கற்பனையான கோட்பாடுகளை புறந்தள்ளுகிறது. மாறாக, நட்சத்திரங்கள் சுருங்குவதால் உருவாகும் கருந்துளைகளால் கூட இந்த வளர்ச்சியை எட்ட முடியும் என இந்த ஆய்வு சொல்கிறது.
இது ஒரு தற்காலிகமான முடிவுதான் என்றாலும், வரும் காலங்களில் அதிநவீன தொலைநோக்கிகள் வழங்கும் தரவுகள், இந்த உண்மையை உறுதிப்படுத்தக்கூடும். பிரபஞ்சத்தின் ஆதி ரகசியங்களை நோக்கிய அறிவியலின் தேடல் இதன் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

