/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மணலுக்கு மாற்றாகும் கட்டுமான பொருள்
/
மணலுக்கு மாற்றாகும் கட்டுமான பொருள்
PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படும் கட்டுமானப் பொருள் கான்கிரீட். இதில் சேர்க்கப்படும் முக்கியமான பொருட்கள் சிமென்டும், மணலும். ஆற்றுமணலை அள்ளுவதால் நீர்வளம் குறைகிறது. சிமென்ட் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளிப்படுகிறது. ஆகவே இருபொருட்களும் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. எனவே இவற்றுக்கு மாற்றாக புதிய பொருட்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் வெஸ்டர்ன் பல்கலை ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளது.
இந்த கட்டுமானப் பொருளை உருவாக்க கடல் நீர், கரிய அமில வாயு, மின்சாரம் ஆகியவை போதும். பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போல இருக்கும் இது, கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஆகிய இரண்டு பொருட்களால் ஆனது. மணலுக்குப் பதிலாக இதை கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்த முடியும்.
பெயின்டிலும் இதை கலந்து பயன்படுத்தலாம். இதன் உற்பத்தியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கார்பன் முதலிய எந்தப் பொருளும் வெளியிடப்படுவதில்லை. இதில் வெளியாகும் ஒரே பொருள் ஹைட்ரஜன் மட்டும் தான். இதை இயற்கை எரிவாயுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேபோல வழக்கமாக சிமென்ட் உற்பத்தியின் போது வெளியிடப்படும் கரியமில வாயுவையே சேகரித்து இதன் உற்பத்திக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே கரியமில வாயு வீணாக வளிமண்டலத்தில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. விரைவில் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

