PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

குறிப்பிட்ட நேரம் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது, உடலுக்குப் பலவிதமான நல்ல பலன்களைத் தரும். இடைவெளியிட்ட விரத முறை தற்போது எடை குறைப்பு உள்ளிட்டவற்றுக்காகப் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.எஸ்.கே. புற்றுநோய் ஆய்வு மையம் விரதத்தால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன என்று நிறுவியுள்ளது.
புற்றுநோய்க் கட்டிகள் எப்போதுமே சத்துக்களை உறிஞ்சியபடியே இருக்கின்றன. அதனால் பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை வளர்கின்றன. விரதமிருக்கும்போது உணவின் மூலம் சர்க்கரை கிடைக்காது. இதனால் உடல் தனக்குத் தேவையான ஆற்றலை, சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் கட்டிகளுக்குப் போதுமான கொழுப்பு கிடைக்காமல் இறந்துபோகும்.
அத்துடன் விரதம் இருப்பதால், ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி பெருகுகிறது. இவை கிருமிகளுக்கும், கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களுக்கும் எதிராகப் போராடுகின்றன. எனவே புற்றுநோய்க் கட்டிகள் அழிகின்றன.
எலிகளில் சோதித்துப் பார்த்தபோது, வாரம் இருமுறை 24 மணி நேரங்கள் உண்ணாமல் இருக்கும் இந்த விரதமுறை பயன் தந்தது. புற்றுநோய்க்கான மற்ற சிகிச்சை எடுத்துக் கொள்வோர் கூடுதலாக இந்த விரதமுறையைப் பின்பற்றினால் பயன் பெறலாம். ஆனால் இதைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக உரிய மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையைப் பெறுவது அவசியம்.