/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கண்கவருமா, 'ஏ.ஆர்.ஸ்மார்ட் கிளாஸ்? '
/
கண்கவருமா, 'ஏ.ஆர்.ஸ்மார்ட் கிளாஸ்? '
PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

மார்க் சக்கர்பர்க், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிதிறன் கண்ணாடிகளை வெற்றி பெறச் செய்வது என்று கங்கணம் கட்டியிருக் கிறார். அண்மையில் அவரது மெட்டா நிறுவனம், 'ரே-பான் டிஸ்ப்ளே' என்ற அதி திறன் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், பல வண்ண மேம்பட்ட மெய்நிகர் திரை (Augmented Reality colour screen) மற்றும் மணிக்கட்டில் அணியக்கூடிய நரம்பியல் பட்டை (Neural Band) ஆகிய துணைக் கருவி களும் வருகின்றன.
இந்த பட்டையை அணிந்தவர், தன், கை அசைவுகளால் ஸ்மார்ட் கண்ணாடியை இயக்கலாம். எனவே, மொபைல் இல்லாமலேயே, அருகில் இருப்பவர்களுக்கு தெரியாமல், எங்கோ இருப்பவருடன் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி, மேம்பட்ட மெய்நிகர் கருவிகளை எளிதாகப் பயன்படுத்த உதவும்.
ஆறு மைக்ரோபோன்களுடன் வரும் மெட்டா கண்ணாடியில் இரண்டு நுண் ஒலிபெருக்கிகளும் உண்டு. இவற்றை காதில் சொருக வேண்டியதில்லை. வலமும் இடமுமாக கண்ணாடி சட்டகத்திலேயே பொருத்தப்பட்டுள்ள 'ஓப்பன் இயர்' ஒலிபெருக்கிகள், காதுகளை நோக்கி ஒலியை பாய்ச்சும். ரொம்பக் கிட்டே இருப்பவருக்கு ஒலி லேசாகக் கேட்கும். 12 மெகாபிக்சல் ஜூம் கேமரா, வெளிச்சத்தில் கூலிங் கிளாஸ் போல மாறும் கண்ணாடிகள் மற்றும் ஆறு மணி நேரம் நீடிக்கும் பேட்டரி ஆகியவையும் கண்ணாடிக்குள் அடக்கம்.
இதற்கெல்லாம், 'மெட்டா' கேட்கும் விலை? ஏறத்தாழ ரூ.66 ஆயிரம். ஆக, புதுத் தொழில்நுட்பம் எது வந்தாலும் வாங்கி மாட்டிக்கொள்வோர்தான் இலக்கு. ஆனால், எதுவந்தாலும், பொறுத்திருந்து வாங்கும் பெரும்பான்மை நுகர்வோரின் கையில்தான் ஏ.ஆர்.ஸ்மார்ட் கண்ணாடிகளின் வெற்றி இருக்கிறது.