PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலருக்கு அன்றாடம் இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது இன்சுலினை எடுத்துக்கொண்டால் சர்க்கரை குறையும். ஆனால் ஏற்கனவே சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை அறியாமல் இன்சுலின் எடுத்துக்கொண்டால் ஆபத்து. அதாவது, சர்க்கரை அளவு மிகவும் குறைந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இன்சுலின் NNC2215. இதை உடலுக்குள் செலுத்திக் கொண்டால் போதும். இது நேரடியாக ரத்தத்தில் கலக்காது, மாறாக எப்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறதோ அப்போது மட்டும் கலக்கும். மற்ற நேரங்களில் உடலில் தங்கி இருக்கும். எலிகள், பன்றிகள் மீது சோதித்துப் பார்த்தபோது இந்த இன்சுலின் நன்றாக வேலை செய்தது. விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
