PUBLISHED ON : மார் 12, 2026 07:43 AM

ஒரு பாட்டில் எண்ணெயைச் சாய்த்து, அதன் கடைசி சொட்டு கீழே விழுவதற்காக நாம் காத்திருப்பது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வு. ஆனால், இந்தப் பொறுமையைச் சோதிக்கும் தருணத்திற்குப் பின்னால் ஒரு சிக்கலான இயற்பியல் ஒளிந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
திரவத்தைச் சாய்க்கும்போது, அது முழுவதும் உடனடியாக வெளியேறுவதில்லை; பாட்டிலின் உட்புறச் சுவரில் ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து, மிக மெதுவாகக் கீழே இறங்குகிறது.
அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலை விஞ்ஞானிகள், இந்த நிகழ்வை 'நேவியர்--ஸ்டோக்ஸ்' (Navier--Stokes) சமன்பாடுகளைக் கொண்டு ஆராய்ந்தனர். இந்த சமன்பாடு, கடலின் அலைகள் முதல் காற்றின் ஓட்டம் வரை விவரிக்கப் பயன்படுபவை. அதே விதிகள், சமையலறையின் திரவ சொட்டுக்களையும் ஆளுகின்றன என்பது வியப்பிற்குரியது. திரவத்தின் 'பாகுத்தன்மை' (Viscosity) அல்லது அடர்த்தியே இந்த வேகத்தைத் தீர்மானிக்கிறது.
உதாரணத்திற்கு, பால் போன்ற அடர்த்தி குறைந்த திரவம் அரை நிமிடத்தில் வெளியேறிவிடும்; ஆனால் கடலை எண்ணெய்க்கு சில நிமிடங்கள் ஆகும். இதுவே பாகு போன்ற, குளிர்ந்த திரவங்களுக்கு பாத்திரத்திலிருந்து கடைசி சொட்டு வடிந்து விழ சில மணிநேரங்கள் கூடப் பிடிக்கும். சமையலறையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் கூட இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டது தான் என்பதை, பிரவுன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

