/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
நிறுத்துக்கு நிறம் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!
/
நிறுத்துக்கு நிறம் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!
PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

உருளைக் கிழங்கு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அதிலும் எண்ணெயில் பொரித்தெடுக்கும் மொறுமொறுப்பான உருளை சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது. விதவிதமான மசாலா, சுவையூட்டிகளுடன் உலகம் முழுதும் விற்கப்படும் சிப்ஸ்களை நம்பி பெரும் விவசாய, உணவுத் தயாரிப்பு சார்ந்த பொருளாதாரமே இருக்கிறது. இப்படியாக அடைத்து வைத்து விற்கப்படும் உருளை சிப்ஸ்களால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன.
சிப்ஸ்களுக்காகவே உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்குகள் நீண்ட காலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன. இந்தக் குளிர் நிலையில் கிழங்கில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறுகிறது.
இப்படியான கிழங்குகளைப் பொரிக்கும்போது அடர் நிறத்தை அடைகின்றன. இதை நுகர்வோர் விரும்புவதில்லை. அத்துடன் அடர் நிறக் கிழங்குகளைப் பொரிக்கும்போது அவற்றில் உள்ள சர்க்கரையிலிருந்து, 'அக்ரைலமைட்' என்ற வேதிப் பொருள் உருவாகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் இயல்பை உடையது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலை விஞ்ஞானிகள் இந்த வேதிப் பொருளின் உற்பத்திக்குக் காரணம் கிழங்கில் உள்ள வாக்குவோலார் இன்வெர்டேஸ் மரபணு தான் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த மரபணுவை மட்டுப்படுத்தி வளர்க்கப்பட்ட கிழங்கை சிப்ஸ் செய்யப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.
இந்தக் கிழங்கைக் குளிர் நிலையில் சேமித்து வைத்தாலும் ஆபத்தான அக்ரைலமைட் உற்பத்தி ஆகாது. அத்துடன் இதில் செய்யப்படும் சிப்ஸ் அடர் நிறத்தில் இல்லாமல் பொன் நிறத்தில் இருக்கும், மக்களும் விரும்பி வாங்குவர். இவ்வாறான மரபணு மாற்றம் வாயிலாக உருளைக் கிழங்கு சிப்ஸை அதிக ஆபத்து இல்லாத உணவாக மாற்ற முடியும்.

