PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

நம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள், சனி. இதற்கு ஏராளமான துணைக்கோள்கள் உள்ளன. அவற்றுள் சில பெரியவை, பல சிறியவை. அப்படியான சிறிய துணைக்கோள்களுள் ஒன்று 'மிமாஸ்.' இதில் தண்ணீர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய விண்கலம் காசினி (Cassini). 1997 அக்டோபரில் சனிக் கோளையும், அதன் வளையங்களையும், துணைக்கோள்களையும் ஆய்வதற்காக ஏவப்பட்டது இது.
சனி கோளுக்கு அருகே, 13 ஆண்டுகள் தங்கி இருந்து நமக்குத் தேவையான புகைப்படங்கள், தகவல்களை இது அனுப்பி விட்டு 2017ஆம் ஆண்டு செயல் இழந்தது.
இந்த விண்கலம் 'மிமாஸ்' குறித்த நிறைய தகவல்கள் அனுப்பியது. இந்தத் தகவல்களை ஆராய்ந்த குயின்மேரி லண்டன் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் துணைக்கோளின் பரப்பின் கீழ் பெருங்கடல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். கடல் உருவாகி 50 முதல் 150 லட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதாகக் கூறுகின்றனர்.
நம் சூரியக் குடும்பத்தில் உள்ள துணைக்கோள்களான எல்செலாடஸ், யூரோபா ஆகியவற்றில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டது.
400 கி.மீ. விட்டம் மட்டுமே கொண்ட மிகச் சிறிய துணைக்கோள் 'மிமாஸ்' இதனுடைய பரப்பு, குழிகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தற்போது இங்கு கடல் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
எனவே அடுத்த கட்டமாக இங்கு உயிர்கள் உள்ளனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.

