PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

நம் உடலுக்கு எவ்வாறு உணவு முக்கியமோ, அதுபோல தண்ணீரும் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அமெரிக்க கலிபோர்னியா பல்கலை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலாவதாக அதீத உடல் எடை கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். தொடர்ந்து பன்னிரண்டு வாரங்கள், சாப்பிடுவதற்கு முன்பாக அவர்கள் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொன்னார்கள். ஆறே மாதங்களில் அவர்களுடைய எடை குறைந்தது.
அடுத்து, டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். காலை உணவு சாப்பிடும் முன்பாக 250 மி.லி தண்ணீரும், மதிய உணவுக்கு முன் அரை லிட்டர் தண்ணீரும், இரவு உணவுக்கு முன் 250 மி.லி நீரும் பருகச் சொன்னார்கள்.
எட்டு வாரம் தொடர்ந்து இவ்வாறு செய்த பின், இவர்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மைக்ரேன் முதலில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட 102 பேரைத் தினமும் 1.5 லிட்டர் கூடுதலான நீர் பருகச் சொன்னார்கள். மூன்று மாதத்திற்குத் தொடர்ந்து கண்காணித்ததில் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலி குறைந்து இருப்பது தெரிய வந்தது.
சிறுநீரகக் குழாய் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, 140 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். தினமும், 1.5 லிட்டர் நீரைக் கூடுதலாக அருந்தும்படி அறிவுறுத்தப்பட்டது. 12 மாதங்களில் மருந்தின்றி குணமடைந்தனர். 25 - 50 வயதுக்குட்பட்ட ஏற்கனவே சிறுநீரகக் கல் ஏற்பட்ட 221 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அவர்கள் குடிக்கும் தண்ணீருடன், இரண்டு லிட்டர் தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அடுத்த 5 ஆண்டுகள் அவர்களுக்குச் சிறுநீரக கல் உருவாவது முற்றிலும் நின்றது. மேற்கண்ட ஆய்வு அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை நமக்கு விளக்குகிறது.

