PUBLISHED ON : ஜூலை 01, 2023

திண்டுக்கல், புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில், 1960ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, மாணவர்களை நல்வழிப் படுத்த வகுப்பில் பிரம்பு உபயோகிக்கும் பழக்கம் இருந்தது.
என் வகுப்பாசிரியர் சிங்கராயர், சற்று வித்தியாசமானவர். பாடம் நடத்தும் போது, மேஜையில் பிரம்பு வைத்திருப்பார். ஆனால், அதை பயன்படுத்த மாட்டார்.
அன்று, தலைமை ஆசிரியர், பாதிரியார் ஆர்.துரைசாமி வகுப்பறைகளை கண்காணித்தபடி வராண்டாவில் ரோந்து வந்தார். அப்போது, மேஜையில் இருந்த பிரம்பை பார்த்து விட்டார். உடனே, ஆசிரியரை அழைத்து, 'பாடம் நடத்த வந்தீங்களா... மாணவர்களை அடிக்க வந்தீங்களா...' என துவங்கி, வார்த்தைகளால் கடுமையாக விளாசினார். மிக மென்மையாக பேசி உண்மையை உணர்த்தி சமாதானப்படுத்தினார் ஆசிரியர்.
தற்போது, என் வயது, 79; பொறியியலில் பட்டம் பெற்று, சொந்தமாக நுாற்பு ஆலை நடத்தி வருகிறேன். மாணவர் நலனில் அக்கறையுடன், தண்டனை தவிர்த்து இனிமையாக கற்பிக்க வலியுறுத்திய அந்த தலைமை ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- எம்.பாஸ்கர பால்ராஜ், தேனி.
தொடர்புக்கு: 94422 72674
