கி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பூரணி - பகுதி (8)
கி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பூரணி - பகுதி (8)
PUBLISHED ON : அக் 01, 2010

இதுவரை: கைலாஷ் தன் மாமாவை
காப்பாற்ற அறிவியல் ஆசான் உதவியை நாடினார்.
இனி-
அறிவியல் ஆசான் சீனிவாசு எதையோ யோசித்தபடி தீவிர ஆராய்ச்சியில் இருந்தார். அவர் மகன் பிரசன்னாவும், அவருக்கு உதவியாக ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். ஆசான் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஆனால், அவர் மனைவியோ ஒரு பொல்லாத சூர்ப்பனகை. அதனால் ஆசான் அவளை கேலியுடன் ராட்ச்சசி என்றே செல்லமாக அழைப்பார். வீட்டு வாயிலில் ஒரு காவல் ரோபோவும் இருந்தது. மணி ஆக ஆக அவர் மனைவி பொறுமை இழந்தாள்.
''ஏங்க மணி பன்னிரண்டாச்சு. தூங்கிற உத்தேசம் இருக்கா இல்லியா? நீங்கள் கெட்டு ஏங்க நம்ம மகனையும் கெடுக்கிறீங்க?'' அவள் கோபத்துடன் இரைந்தாள்.
''அடியே ராட்ச்சசி. இந்த சீனிவாசுவின் மகிமை இப்போது தெரியாது. என் ஆராய்ச்சியில் நான் வெற்றி பெற்றால்...'' அவர் அவளை பெருமிதத்துடன் பார்த்தார்.
''ஆமாம். இப்பவே பசங்களெல்லாம் அரை லூசுன்னு சொல்றாங்க. அப்புறம் முழு லூசுன்னு சொல்லி என் மானத்தை வாங்குவாங்க,'' என்று அவள் கூறியதுதான் தாமதம், காவல் ரோபோ உடனே வேகமாக வந்தது. ஆசான் அதிர்ச்சியுடன், ''நீ ஏன் இப்போது வந்தாய்?'' என்று கடுகடுப்புடன் கேட்டார்.
''என்னால லூசு கிட்ட எல்லாம் வேலை பார்க்க முடியாது. உடனே எனக்கு விடுதலை கொடுங்கள்!'' என்றதும், பிரசன்னா உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். ஆசான் ராட்ச்சசியை முறைத்தார்.
''அடியே, யாராக இருந்தாலும் வைக்க வேண்டிய இடத்துல வெக்கணும். தெரியுதா? காவலுக்கு வெச்சவன் உள்ள வந்ததும் என்ன பேச்சு பேசறான் பார்த்தியா?'' என்றார்.
''அட! நம்ம தம்பி கைலாசு! வாப்பா!'' என்று அன்புடன் அழைத்தது ரோபோ.
''சரி, இந்த நேரத்துல அதுவும் இப்படி ஒண்ணுக்கும் உதவாத இந்த வயசான ஆளோட வேற வந்திருக்கியே. பிரசன்னா தம்பியை பார்க்கணுமா?''
''இல்லை. நான் அவசரமாக என் ஆசானை பார்க்கணும்!'' என்றான் கைலாஷ்.
''அய்யோ ஆசானையா? அவரு ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு எங்க எல்லாரையும் குழப்பிட்டு இருக்காரு. நீயும் குழம்பப் போறியா?'' காவல் ரோபோ கேலியுடன் பேசியது.
''அடே கைலாஷ், இந்த காவல்காரன்கிட்ட நமக்கென்னடா பேச்சு. நேர உள்ளே போவியா? நாம வந்த வேலை எவ்வளவு அவசரமானது. கோபத்துடன் பேசியபடி ஆசானின் காவல் ரோபோவை தள்ளிவிட்டு கைலாசை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றது அவன் ரோபோ.
''அட, இந்த ஆளு நம்மை விட பலசாலியாத்தான் இருக்கான். சரி... உள்ள போகட்டும். பிறகு வெச்சிகிடலாம் நம்ம கச்சேரியை!'' என்று காவல் ரோபோ திட்டியபடி வாயிலில் அமர்ந்தது.
''அட என்ன கைலாஷ், அறிவியல் பாடத்துல ஏதாச்சும் சந்தேகமா? நான் தான் எப்ப கேட்டாலும் சொல்லுவேனே. ஏதா இருந்தாலும் போனிலேயே கேட்டிருக்கலாம் இல்லியா? இப்படி நேர வந்துதான் உன் ஆசான் கிட்ட கேட்கணுமா?'' என்று அன்புடன் பேசி, அவன் தோளை பிடித்துக் கொண்டு தன் அறிவியல் ஆராய்ச்சி அறைக்கு வந்தார்.
பிரசன்னாவும் கைலாஷை கைக்குலுக்கி வரவேற்றான். ராட்ச்சசி கண்டு கொள்ளவே இல்லை. தூங்கப் போய் விட்டாள்.
''ஆசான்! செய்தி மிக அவசரம்? இது உலக நலன் சம்பந்தப்பட்டது. உடனே உங்கள் உதவி தேவைப்படுகிறது. என் மாமா பிரகடீஸ்வர் மிகவும் உங்களை நம்பி இருக்கிறார்!'' என்றான் கைலாஷ் படபடப்புடன்.
''தம்பி! இப்படி மொட்டையா சொன்னா எப்படி? என்ன ஏதுன்னு விவரமா சொல்லு. எதா இருந்தாலும் உன் ஆசான் செய்து முடிப்பான்னு உனக்கு தெரியுமில்ல.''
''நிச்சயமா!'' மாமாவை சந்தித்தது முதல் அவர் தலையில் உள்ள செயற்கை முடியில் உளவு கூறும் நுண்ணிய மின் இழை இருந்தது பற்றியும், மாமா கண்டெடுத்த வளையத்தால் செயற்கை தீவின் சமிஞ்சை மொழி கேட்டது வரையும் அத்துடன் வானில் தெரிந்த மின்மினுக்கும் பச்சை நட்சத்திரம் வரை ஒன்று விடாமல் கூறினான். ஆசான் அதிர்ச்சியில் உறைந்தார். பிரசன்னாவும் ஒரு திகிலுடன் கேட்டான்.
''தம்பி கைலாஷ். நீ ரொம்ப கெட்டிக்காரன். அந்த கொடியவர்கள் செயலால் நிரபராதியான உன் மாமா குற்றவாளியோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டுக்காவலில் உள்ளார். அதற்காக வருந்துகிறேன். இப்ப நான் என்ன செய்யணும். உடனே சொல்லு!'' என்று கேட்டார் ஆசான்.
அவன் செயற்கை தீவினரின் சங்கேத மொழியை கூறினான். ஆசான், இந்த மொழிக்கான விளக்கம் விஞ்ஞானிகளின் நூலகக் கட்டடத்தின் இருநூற்றிப் பத்தாவது தளத்தில் இருக்கிறதாம். நூலகம், விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியது. அன்னியர் நுழையா வண்ணம் பாதுகாப்பாக அவர்களுக்கு பிரத்யேக உலோக இழைகளால் ஆன உடை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் அந்த உடை அணிந்து உடனே நூலகம் செல்ல வேண்டும். சங்கேத மொழிக்கான விடை காண வேண்டும். ஆபத்தான விஷயம் என்றால் உடனே நாம் அதை களைய முயற்சி எடுக்க வேண்டும். இதுதான் என் மாமாவின் விருப்பம். செய்தி மிக அவசரமாதலால் உங்களை உடனே செயல்பட என் மாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்!'' எனறான் கைலாஷ் மூச்சு விடாமல்.
''சரி! அதற்கான உடை எனக்கு எப்படி கிடைக்குமாம்?'' ஆசான் புருவத்தை உயர்த்தினார்.
''ஆசான்! கவலையே வேண்டாம். நீங்கள் என் மாமாவின் உடைகளை அணிந்துதான் செல்லப் போகிறீர்கள். என் மாமாவின் உடல் அமைப்போடு தங்கள் உடல் வாகு ஒத்து வருவதால் என் மாமாவும் என் வேண்டுகோள்படி தங்களை நூலகம் செல்ல அனுமதித்தார். உடனே வாருங்கள். என் மாமா வீடு செல்வோம்,'' என்றான் கைலாஷ்.
உடனே தன் மகன் பிரசன்னாவை பார்த்து தான் திரும்பி வரும் வரை ஆராய்ச்சிக் கூடத்திலேயே இருக்க பணித்து இரு ரோபோக்களையும் வாயிலில் காவலுக்கு வைத்துவிட்டு தன் மினி ஹெலிகாப்டரில் ஏறி கைலாசுடன் பிரகடீஷ்வர் இல்லம் வந்தார். கைலாஷ் வீட்டை திறந்து மாமாவின் உலோக ஆடைகளை ஆசானுக்கு கொடுத்தான். அவர் அதை அணிந்து கொண்டார். ஆஹா ஆசான் இப்ப நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்றதும் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு முறை பெருமையுடன் பார்த்தவர், ''இந்த அழகு புருஷனை இப்படி பார்க்க என் ராட்ச்சசிக்கு கொடுத்து வைக்கலியே!'' என்று கூறி சிரித்துக் கொண்டார்.
''சரி கைலாஷ். நீ கூறிய அந்த சங்கேத மொழியை மீண்டும் கூறு!'' என்றார்.
''டிக் டிக் டிக் - 004 - ரோஸ் ரோஸ் - ரெடி - ஓவர்'' - ஆசான் ஓகேவா என்று தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி கைலாஷ் கேட்கவும், அவரும் விரலை உயர்த்தி சரி என்று கூறிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு வேகமாக தன் ஹெலிகாப்டரில் அறிவியல் நூலகம் வந்தார். கைலாஷ் ஆசானை வழி அனுப்பி நூலகத்தின் எதிர்புறம் இருந்த பரந்தவெளி பார்க்கில் நின்று கொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தான். ஆசான் உடனே நூலகம் உள்ளே சென்றார்.
வாயில் காவல் ரோபோக்கள் அவரை பரிசோதித்தன. பின் அவைகளின் கரு விழிகள் பச்சை நிறமாக மாறவும் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். வேகமாக சென்ற ஆசான் அந்த தளத்தின் கம்ப்யூட்டர் உதவியுடன் சங்கேத மொழிக்கான விளக்கத்தை அறிந்து குறித்துக் கொண்டு செய்தியின் ஆபத்தை கருதி அதிவேகமாக வெளியே வந்தார். அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஆம். கைலாசைக் காணவில்லை. ''கைலாஷ், கைலாஷ்!'' என்று கத்தியபடி எங்கும் தேட அவன் கிடைக்கவில்லை.
( — 8 தொடரும்)
