PUBLISHED ON : செப் 27, 2013

பறவைகள் உலகிலேயே பல்லாயிரக்கணக்கான இனங்கள் இருக்கின்றன. அதிலே, கொம்பலகுப் பறவை என்று ஓர் இனம். இப்பறவையின் அலகின் மேல் கொம்பு போல் அமைப்பு உள்ளது. இப்பறவை தான் மனைவியை சிறை வைக்கும் பறவையாகும்.
இவை இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளிலோ அல்லது மரங்கொத்திப் பறவை விட்டுச் சென்ற மரப்பொந்திலோ வசிக்கும். பெண் பறவை முட்டையிடும் சமயத்தில், அதை இக்கூட்டினுள் அடைத்து ஆண் பறவை அப்பொந்தை மூடிவிடும். மண், செரிக்கப்பட்ட உணவு, உமிழ்நீர் ஆகியவற்றைக் கொண்டு பொந்தின் வாயிலில் சுவர் போல் கட்டி அதை அடைத்துவிடும். அந்தச் சுவரில் ஒரே ஒரு சிறு துளையை அமைத்திருக்கும். அந்தத் துளையின் வழியாக தன் மனைவிக்கு இரை தேடி வந்து ஆண் பறவை ஊட்டும்.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிந்து வெளியே வரும் வரை மனைவிக்கு இந்த சிறைவாசம் தான். இப்பறவையானது, இறகுகளை உதிர்க்கும் சமயங்களிலும் பெண் பறவை இரை தேட முடியாமலும், பறக்க முடியாமலும் தவிக்கும். அப்போதும் இதேபோல் பொந்தில் அடைத்து வைத்து மனைவிக்கு இரை கொடுத்து காப்பாற்றும். அப்பப்பா பாசக்கார புருஷன்!
