sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஆண் அழகன் அமரேஷ்!

/

ஆண் அழகன் அமரேஷ்!

ஆண் அழகன் அமரேஷ்!

ஆண் அழகன் அமரேஷ்!


PUBLISHED ON : ஏப் 22, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிணபுரி என்ற நாட்டை மித்திரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவரது ஒரே மகள் மலர்விழி. அவளை அருமை, பெருமையாக வளர்த்து எல்லாக் கலைகளையும் கற்க ஏற்பாடு செய்தார். அவள் வளர்ந்து அழகியாகவும், அதிபுத்திசாலியாகவும் ஆனாள்.

அப்போது மித்திரனுக்கு அவளது விவாகம் பற்றிய கவலை ஏற்பட்டது. அவளை மணப்பவன் அந்நாட்டின் அரசனாவானே! எனவே, அவளது அறிவுக்கு இணையாக உள்ளவனையே அவளது கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் மன்னனின் தர்பாருக்கு ஒரு பண்டிதர் வந்தார்.

''அரசே! சகலசாஸ்திர விற்பன்னன் பக்ரிநாத் என்பவன் நான். என் நாடு மாளவம், காசி, தட்ச சீலம் ஆகிய இரு வித்தியா பீடங்களிலும் உள்ள பண்டிதர்களை வென்று எனக்கு நிகர் யாரும் இல்லை என்று பெயர் பெற்றவன்.

''நான் இங்கு மூன்று கேள்விகளைக் கேட்பேன். இந்த நாட்டுக் குடிமகன் யார் வேண்டுமானாலும் அவற்றிற்குப் பதில் கூறலாம். அவற்றிற்குச் சரியான விடைகளைக் கூறி விட்டால்... அப்படிக் கூறியவனிடம் இதுவரை நான் பெற்ற பதக்கங்களைக் கொடுத்து, அவனை வணங்கி விட்டுப் போய் விடுவேன்.

''சரியான விடைகளைக் கூறாமல் போனால்... உங்கள் ஆஸ்தான பண்டிதர்கள் எனக்கு மரியாதை காட்டி, பல்லக்கில் அமர்த்தி அதனைச் சுமந்து என்னை வழி அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார் மிடுக்காக.

பக்ரிநாத்தின் ஆணவப் பேச்சு பண்டிதர்களையும், மன்னனையும் வெறுப்படைய செய்தது.

''நீங்கள் விட்ட சவாலை நாம் ஏற்கிறோம். உங்கள் கேள்விகளுக்கான விடைகள் மூன்று நாட்களுக்குள் கிடைக்கும். அதுவரை நீங்கள் என் விருந்தினர் விடுதியில் தங்கி இருங்கள்,'' எனக் கூறினார் மன்னர்.

''சரி. என் முதலாவது கேள்வி இது. யாரும் இல்லை எனக் கூறும் ஒரு உண்மையைக் கூற வேண்டும். ஆனால், அது முழுக்க முழுக்கப் பொய்யாக இருக்க வேண்டும்.

''என் இரண்டாவது கேள்வி... கேளாத ஒலியும் பாராத காட்சியும் யாவை? மூன்றாவது கேள்வி... ஆண்டி முதல் அரசன் வரை எதற்கு மிக எளிதில் அடிமை ஆகிறான்? இக்கேள்விகளுக்கு சரியான விடைகள் தேவை,'' எனக் கூறி அரசனது விருந்தினர் விடுதிக்குச் சென்றார்.

அக்கேள்விகளைக் கேட்ட ஆஸ்தான பண்டிதர்களும், மன்னனும் திகைத்துப் போயினர். பண்டிதர்கள் அக்கேள்விகளுக்கான விடைகள் பற்றி விவாதித்தனர். என்னென்னவோ விடைகளைக் கூறினர். ஆனால், மன்னனுக்கோ அவை எதுவும் சரியானதாகப் படவில்லை.

அந்தப்புரத்திற்குச் சென்று தன் மகளின் அறையை அடைந்தார் மன்னர். தர்பாரில் நடந்ததை எல்லாம் அவளிடம் கூறி, ''மலர்விழி... நாம் இதில் தோற்றுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால், நீ இருக்கிறாயே என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. இதனால் நீ இக்கேள்விகளுக்கு விடைகளைச் சொல் பார்க்கலாம்,'' என்றார்.

''எனக்கும் விடை தெரியவில்லை... ஆனாலும் நம் அமைச்சரின் புதல்வர் அமரேஷ் இவற்றிற்கான விடைகளை நிச்சயமாகக் கூறுவார். ஏனெனில், அவர் ஒரு மாபெரும் மேதை எனப் பலர் புகழக் கேட்டிருக்கிறேன்,'' என்றாள்.

அதைக் கேட்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தவாறே தன் பட்டத்து ராணியைக் கண்டு விஷயத்தை கூறினான்.

''நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நம் மகள் அமரேஷை விரும்புகிறாள் என்று தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அவளே சொல்ல முடியும். இருப்பினும், அமரேஷை கேட்கச் சொன்னது அவனது புத்தி கூர்மையை நீங்கள் காண வேண்டும் என்பதற்காகத் தான்,'' என்றாள்.

''ஓ! இதுவா விஷயம். என் மகளே எனக்கு பரீட்சை வைக்கிறாளா? சரி. இதனால் நான் இரண்டு விதத்தில் பயன் பெறுவேன்.

''ஒன்று நாட்டின் மானத்தைக் காப்பது. மற்றது அலையாமல் எனக்கு மாப்பிள்ளை கிடைப்பது. இதுவும் ஒரு வகையில் நல்லதே,'' என்றார் மன்னர்.

அமரேஷை அழைத்து வரச் சொன்னார் மன்னர்.

அவன் நல்ல அழகன் என்று அவனது தோற்றத்தையும், நடை, உடை பாவனைகளைக் கொண்டும் மன்னர் தெரிந்து கொண்டார். அவனை உட்காரச் சொல்லி விஷயத்தைக் கூறினார்.

''அரசே பக்ரிநாத் மாபெரும் பண்டிதர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் சாஸ்திரங்களையும், கற்பனைகளையும், உண்மைகளையும் தன் மூன்று கேள்விகளில் அடக்கி உள்ளார்.

''அவரது முதல் கேள்வி தர்க்க சாஸ்திரத்தைச் சார்ந்தது. அதற்கு விடை எனக்கு மரணம் இல்லை என்பதே.

''இது உலகறிந்த பச்சைப் பொய். கடவுளின் படைப்பில் மரணம் அடையாத ஜீவராசியே கிடையாது. ஆனால், தர்க்க சாஸ்திரப்படி யாராலும் இதனை மறுக்க முடியாது. ஏனெனில், அந்த சாஸ்திரப்படி, நான், எனது என்ற சொற்களெல்லாம் ஆத்மாவைக் குறிப்பன. ஆத்மாவிற்கு அழிவே இல்லை. எனவே, சாதாரண முறையில் பார்த்தால் இது பொய்; தர்க்க சாஸ்திரப்படி இது மெய்,'' என்றான்.

இந்த பதிலைக் கேட்ட மன்னன் அவனது அறிவை வியந்தவாறே, ''அருமை... சரியான விடை. மற்ற இரு கேள்விகளின் பதில்,'' என்றார்.

''இரண்டாவது கேள்வியில் கேட்க முடியாத ஒலி என்பது மனதில் ஏற்படும் எழுச்சி. அது சொற்களாய் வெளிவருவதற்கு முன் எழும் ஒலி. பிறகே அது வாயால் கூறப்படுகிறது. அதை உணர்பவனைத் தவிர மற்றவன் அறிய மாட்டான். அதுபோலக் காண முடியாத காட்சி கற்பனை. கற்பனையில் காணும் காட்சிகளை உண்மையில் காண முடியாது. எனவே, மன உணர்வு, கற்பனை என்பனவே இரண்டாவது கேள்விக்கான பதில்,'' என்றான்.

''ஆகா! சரியான விடைதான். சரி மூன்றாவது கேள்வியின் விடை என்ன?'' என்று கேட்டார் மன்னர்.

''ஆண்டி முதல் அரசன் வரை எளிதில் வசப்படுவது புகழ்ச்சி ஒன்றினாலேயே. புகழ்ச்சியைக் கேட்டு மயங்காதவர் யார்? எனவே, புகழ்ச்சியால் யாரையும் எளிதில் வசப்படுத்தி விட முடியும். இதுவே மூன்றாவது கேள்வியின் விடை,'' என்றான்.

''சபாஷ், இப்போது உனக்கு ஒரு பரீட்சை. நீ, காணாத ஒன்றை நான் காண்கிறேன். அந்தக் காட்சி என்ன?'' என்றார் மன்னர்.

''உங்கள் மகள் எனக்கு மாலையிடும் காட்சிதான் அது. இதை நானும் காண்கிறேன்,'' என்றான்.

அதைக் கேட்ட மன்னன் கோபம் கொண்டவர் போல நடித்து, ''நீ மூன்று கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறி விட்டதால் மட்டும் என் மகளை மணக்கப் போவதாகத் தீர்மானித்து விட்டாயா?'' என்று கேட்டார்.

''உங்கள் மனதில் எங்கள் திருமணம் பற்றித் தோன்றாது இருந்திருந்தால், நான் மூன்று கேள்விகளுக்குச் சரியான விடை சொன்னதும் என்னைப் பாராட்டி இந்த விடைகள் சரியா? என பக்ரிநாத் கூற வேண்டும் எனக் கூறியிருப்பீர்கள்.

''நீங்களோ எல்லா வேலைகளையும் விட்டு விட்டு என்னைப் புகழ்ந்ததோடு மேலும், ஒரு பரீட்சை வைத்தீர்கள். எதற்கு என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?'' என்றான்.

''ஆகா! இப்படித் தீர்மானமாக எதையும் சொல்லும் நீ என் மகளுக்கு ஏற்றவனே. நாம் இருவரும் கண்ட காட்சியை விரைவிலேயே உண்மையாக்கி விடுகிறேன்,'' என்றார் மன்னர்.

மன்னர் உடனேயே தர்பாரைக் கூட்டினார். இளவரசியும், ராணியும், அமரேஷும் அங்கு சென்றனர். பண்டிதர் பக்ரிநாத் விரைவில் வந்து சேர்ந்தார்.

அந்த நிறைந்த சபையில் அந்தப் பண்டிதரின் மூன்று கேள்விகளுக்கும் தன் விடைகளைக் கூறினார் அமரேஷ்.

''அந்த விடைகள் சரியானவையே!'' என்று கூறி அமரேஷை மரியாதையுடன் வணங்கினார் பக்ரிநாத்.

தன் பதக்கங்களை எல்லாம் எடுத்து அவனிடம் கொடுத்தார். முடிவில் தான் அணிந்திருந்த மாலையைக் கழற்றி அமரேஷ் கழுத்தில் அணிவித்தார். அடுத்த நல்முகூர்த்தத்திலேயே இளவரசிக்கும், அமரேஷுக்கும் இனிதே, திருமணம் நடைப்பெற்றது. அவர்கள் வளமாக வாழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us