PUBLISHED ON : ஜூலை 30, 2010

அனைவருக்கும் எனது அன்பு.
காற்றில் ஓடும் பைக்!
பெட்ரோல் விலை ராக்கெட்டில் போகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.3.50 பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990களில் ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இப்போது சென்னையில் ரூ.55.92க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயரும் போதெல்லாம் பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் ஏழை, நடுத்தர மக்களை பீதியடைய செய்துள்ளது. இதனால் மாற்று எரிபொருளால் இயக்கப்படும் இரண்டு சக்கர வாகனங்களை தயாரிக்க உலகெங்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஏற்கனவே, பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் பராமரிப்பு செலவு அதிகம். சூரிய சக்தி, ஹைட்ரஜன் வாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடந்து வந்தது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கியான்விகார் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ஐந்து பேர் காற்றை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை இயக்க முடியுமா என்று கடந்த 6 மாதமாக ஆராய்ச்சி நடந்தி வந்தனர்.
ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேல் இந்த ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டனர். 'என்னது காற்றில் பைக் ஓட்டப் போகிறீர்களா?' என்று ஆச்சரியப்பட்டவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர் மாணவர்கள். அவர்களது தீவிர முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அழுத்தப்பட்ட காற்றை பயன்படுத்தி ஓடும் மோட்டார் சைக்கிளை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
அழுத்தப்பட்ட காற்றை இன்ஜினில் செலுத்தியதும் மோட்டார் சைக்கிள் ஓடத் தொடங்குகிறது. மணிக்கு 30 கி.மீ., வேகம் வரை இந்த மோட்டார் சைக்கிள் ஓடுகிறது.
காற்றில் ஓடுவதால் பெட்ரோலில் ஓடும் மோட்டார் சைக்கிளைவிட பாதி செலவுதான் ஆகுமாம். இந்த மோட்டார் சைக்கிளுக்கு, 'எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று மாணவர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த பைக்கை வாகன தயாரிப்பாளர்களின் உதவியுடன், வர்த்தக முறையில் தயாரிக்க கியான் விகார் பல்கலைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பெட்ரோலை சேமிக்க கருவி!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு. விவசாயி - காரில் பெட்ரோலை மிச்சப்படுத்தும், 'ப்யூயல் சேவர்' என்ற மின்னணு கருவியை கண்டுபிடித்துள்ளார். கருவி காரில் பொருத்தப்பட்டால் மைலேஜில் 6 கி.மீ., அதிகம் கிடைக்கிறது.
கருவியை கண்டுபிடிக்க அதிக செலவு ஆனதால் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 'டெக்னாலஜி' பிசினஸ் இன்குபேட்டர் என்ற அமைப்பை அணுகி நிதியுதவி பெற்று கருவியை உருவாக்கியுள்ளனர். இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை நிதி ரூ.5 லட்சம், கருவியின் அடுத்த நிலைக்கான முன்னேற்றத்துக்கு உதவியது.
நேரு கூறியதாவது: 'ப்யூல் சேவர்' என்ற கருவி பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் எளிய முறையில் பொருத்தி கொள்ள ஏதுவாக, 'எம்பெடட் டெக்னாலஜி சிஸ்டம்' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட கார்களில் இக்கருவி பொருத்தப்பட்டு பரிசோதனை செய்ததில், உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு 15 சதவீதம் மேலாக பெட்ரோல் செலவு மீதமாவதாகவும், 20 சதவீதம் மேலாக அதிக மைலேஜ் தருவதாகவும் சோதனை முடிவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.
புனேயில் செயல்பட்டு வரும் ஆட்டோமோடிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா (ஏ.ஆர்.ஏ.ஐ.,) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டு, அதன் மூலம் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மூலம் இதை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இக்கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
சமைக்காமலே அரிசி சாப்பிடலாம்!
சிறுவர்கள் எதுவும் நொறுக்கு தீனி கிடைக்கவில்லை எனில் ஒரு பிடி அரிசியை வாயில் போட்டு கொள்வர். சாப்பாடு போடுன்னு நாம சொல்லும்போது, இதோ சாதம் வெச்சிருக்கேன் ஆயிடும்னு அம்மா சொல்லுவாங்க. சமைக்காமலே சாப்பிடக்கூடிய அரிசி இருந்தால்... இதென்ன படிக்காமலேயே மார்க் கிடைச்ச கதையா இருக்கே என்று நினைக்கிறீர்களா!
சமைக்காமலே சாப்பிடக்கூடிய 'கோமல் சாயல்' எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டை (சி.ஆர்.சி.ஐ.,) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக அரிசியை வெந்நீரில் வேக வைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கி உள்ளனர்.
இதுக்கும் அரைமணி காத்திருக்கணும். ஆனால், அரிசி சாதமாக எரிபொருள் தேவையில்லை. இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையுடன் இருக்கும்.
இதனால், அரிசியை வேக வைத்து சாப்பிட வேண்டியுள்ளது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே, லேசான தன்மையுடன் இருக்கும். இவ்வகை அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அப்படியே சாதம் போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.
ஒன் லைன் ஒண்டர்!
நீங்கள் உண்மையிலேயே அழகானவராக விளங்க வேண்டுமானால், கண்ணாடியின் முன் ஒரு நிமிடமும், உங்கள் ஆன்மாவின் முன் ஐந்து நிமிடமும், கடவுளின் முன் 15 நிமிடமும் நில்லுங்கள்.
அன்புடன், அங்குராசு.
***
