PUBLISHED ON : ஜூன் 29, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
டிமாண்டான படிப்பு!
ஜப்பானில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டது சுனாமி. அந்த அழிவுகளை விட ஜப்பான் அரசு கலங்கிப் போயிருப்பது, அங்குள்ள அணு உலைகளில் இருந்து கசியும் விஷவாயுக்களைக் கண்டுதான். இதுவரை ஆறு லட்சம் மக்களை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். உலகிலேயே அணு உலைகள் அதிகம் உள்ள மூன்றாவது நாடு ஜப்பான் (54). இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா (104), இரண்டாவதாக இருப்பது பிரான்ஸ் (58), இதை தவிர அதிதீவிரமான பாதுகாப்புடன் கூடிய கட்டுமானம் கொண்ட அணு உலைகளில் முதலிடம் வகிப்பது ஜப்பான்தான். இவ்வளவு பாதுகாப்பான கட்டுமானத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால், கதிரியக்க கசிவு வெளியேறியது. இந்த கதிரியக்க கசிவை போல எதிர்காலத்தில் வராமல் இருக்க எப்படித் தடுக்கலாம் என்பது குறித்துதான் இப்போது அங்குள்ள சுற்றுப்புற ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் யோசித்து வருகின்றனர்.
அணுசக்தி மூலம் மின்சாரம் பெறும் பட்டியலில், உலகளவில் ஆறாம் இடத்தில் இருக்கிறது நம் இந்தியா. இது தவிர நிலக்கரி, இயற்கை எரிவாயு, டீசல் இவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையங்கள் மட்டும் இந்தியாவில் மொத்தம் 159 இருக்கின்றன. இந்த உலைகளில் இருந்து வெளியேறும் வேதிப்பொருட்களால் நிலம், நீர், காற்று மூன்றும் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர உலகமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீராலும், சுற்றுப்புறச்சூழல் மாசுபட்டு வருகிறது. பெங்களூரில் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் மட்டும், அங்குள்ள குழந்தை களில் 45 சதவீதத்தினருக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நில மாசுபாட்டால், பஞ்சாப் மாநிலத்தில் பேரிட்காட் எனும் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறைபாட்டுடன் பிறப்பதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் கரிம சாம்பல்கள் நிலத்தில் படிந்து நிலத்தை மாசுபடுத்து கின்றன. இதனால், விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. உலகமயமாக்கலால், உற்பத்தியை கருத்தில் கொண்டு தொழிற் சாலைகள் பெருக்கத்தை தவிர்க்க முடியாதுதான். ஆனால், இதனால் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும், குறைக்கவும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தற்போது அவசியமாகிறது. அந்த வகையில், சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் கல்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்தப் படிப்புக்குத்தான் தற்போது மவுசு. வேலைவாய்ப்புக்காக மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழல் சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தற்போது தேவையாய் இருக்கிறது.
படித்து முடித்தவுடன் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு குவிந்திருப்பதால், சுற்றுப்புறச் சூழல் சார்ந்த கல்வி, சமுகம் சார்ந்த அக்கறையும், சுற்றுப்புறச் சூழல் சார்ந்த கவலையும் கொண்ட மாணவர்களுக்கு, சிறந்த ஒரு சாய்ஸாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, மேலாண்மை ஆகிய பல்வேறு பிரிவுகளில் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த கல்வியை கற்கலாம். அனைத்துப் பிரிவுகளுக்கும் தற்போது வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில கல்வி நிலையங்களில் மட்டும்தான் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் குறித்த பட்டப்படிப்பும், பொறியியல் படிப்பும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது மல்டி பர்பஸ் பொடி!
தேவையானவை: முற்றிய பெரிய தேங்காய்-1, மிளகாய் வற்றல் 15 அல்லது 20, கடலைப் பருப்பு-4 டேபிள் ஸ்பூன், தனியா-4 டேபிள் ஸ்பூன், கசகசா-2 டீஸ்பூன், லவங்கப்பட்டை-4, லவங்கம்-10.
செய்முறை: தேங்காயைத் துருவி, எண்ணெய் விடாமல் சிவக்க வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு கசகசாவை வறுத்துக் கொண்டு, பிறகு கடலைப் பருப்பு, மிளகாய் வற்றலைச் சேர்த்து, நன்றாக வறுக்கவும். பிறகு தனியா, லவங்கப்பட்டை, லவங்கம் சேர்த்து வறுத்தெடுத்து ஆறியபின் மிக்ஸியில் தேங்காய்த் துருவலுடன் நன்றாகப் பொடித்தால் 'மல்டி பர்பஸ்' மசாலா பொடி தயார். கொப்பரை சேர்ப்பதாயிருந்தால் துருவி தனியாக வறுத்து, இதேபோல் செய்யவும். இந்த பொடியை உபயோகித்து வாங்கி பாத், வெஜிடபிள்பாத், 'ஈஸி பிஸிபேளா பாத்' செய்யலாம். 'வாங்கி பாத்' செய்ய கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி இவற்றை சிறு துண்டங்களாக நறுக்கி, கடுகு தாளித்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். அதனுடன் தயாரித்து வைத்திருக்கும் மசாலா பொடி, தேவையான அளவு வடித்த சாதம் கலந்தால் சுலபமான, 'வாங்கிபாத்' தயார்.
காலிப்ளவர், பீன்ஸ், கேரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி முதலியவற்றை வதக்கி, சாதம் பொடி சேர்த்தால் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு வெஜிடபிள் சாதம் கொடுத்தனுப்பலாம்.
அவரை, கேரட், கத்திரிக்காய், பரங்கி, பூசணி போன்ற காய்கறிகளை சிறிது பெரிய துண்டங்களாக நறுக்கி வேக வைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பு, வடித்த சாதம், புளி கரைசல், உப்பு, மல்டி பர்பஸ் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டால், திடீர் பிஸிபேளா பாத் ரெடி!
இள நீரின் ஈடில்லா பயன்கள்!
வழுக்கை இல்லாத இளநீரை பகல் உணவுக்கு பிறகு அருந்துவதால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெரும்பாலானோர் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவர். இது தவறு. இவர்களுக்கு சிறிது நாளில் பசி குறைந்து, குன்மம் என்ற வயிற்று நோய் ஏற்படும். உணவுக்கு பின் இளநீர் அருந்துவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்.
இது கண்களுக்கு பிரகாசத்தை கொடுக்கும். இளநீரை சிறிது தேன் கலந்து சாப்பிட மலச்சிக்கல், மூலநோய்கள் நீங்கும். இளநீரை தொடர்ந்து முகத்தில் தடவி வர அம்மை தழும்புகள் மறையும். இரவே இளநீரை சீவி, அதில், சப்ஜா விதை 10 கிராம் சேர்த்து சீவிய மட்டையை மூடி வைத்து அதிகாலை அதை குடிக்க பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறு, வயிற்று வலி, வெள்ளைப்படுதல் குணமாகும். குளிர்ச்சி உடம்பினர் இம்முறையைத் தவிர்க்கவும். மஞ்சள் காமாலை நோயின் தன்மையை குறைக்கும். உஷ்ணக் கட்டி ஏற்படுவதை தடுக்கும். இதை மரத்திலிருந்து வெட்டியவுடன் ஒரு சில மணி நேரங்களில் சீவி அதிலிருந்து இளநீரை குடித்து விடவும். வேறு பாத்திரங்களில் ஊற்றி குடிப்பதனால் இதன் மகத்துவ பயன் குறைந்து விடுகிறது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு!
