PUBLISHED ON : அக் 05, 2012

அ நிறம் | அளவு
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கண்ணே... கலர் மீனே...
மீன்களின் வகைகள், அவற்றைப் பராமரிக்கும் முறைகள் குறித்துக் கீழே காண்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஈர்க்கும் வண்ண மீன்களில் சுமார் 2 ஆயிரம் வகைகள் உள்ளன. இதில், பாதி வகைகள் கடல் நீரில் மட்டுமே வாழக் கூடியவை. மற்றவை சாதாரண தண்ணீரில் வாழ ஏற்றவை.
மீன் தொட்டியில் அழுக்கை சுத்திகரிக்கும் 'டேங்க் கிளீனர்' என்ற மீன் இனத்தில் சுமார் 30 வகைகள் உள்ளன. இவற்றுடன் பெரும் பாலும் எந்த மீன்களையும் சேர்த்து வளர்க்கலாம். அந்த அளவிற்கு சாதுவானவை.
'ரெயின்போ' வகை மீன்கள் பார்ப்பதற்கு வண்ணமயமாக இல்லை என்றாலும், அவை நீந்துவது கொள்ளை அழகு. 'பெதர்' வகைகளுக்கு பறவையைப் போல சிறகுகள் இருக்கும். 'பேரட்' வகைகளில் பல வண்ண ரகங்கள் உண்டு. இவ்வகை மீன்கள் வானவில் போன்று 'கலர்புல்'லாக இருக்கின்றன.
மொரை, ஏக்னோடிக் வகை மீன்கள் பார்ப்பதற்கு பாம்பு போலவே இருக்கும். கார்னியோரஸ் மீன்கள் அசைவ விரும்பிகள், ஹெர்பி ஓரஸ் மீன்கள் சைவ விரும்பிகள், 'பைட்டர்' மீன் பார்த்ததும் மனசை ஈர்க்கும். சிறிய கண்ணாடித் தொட்டியில் இரண்டு ஆண் மீன்களைப் போட்டால், சாகும் வரை இரண்டும் சண்டையிடுமாம். சாதாரணமாக மீன்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை உயிர் வாழும். கப்பீஸ், ரேமிரேஸி வகை மீன்கள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழ்கின்றன. எத்தனை வகை மீன்கள் இருந்தாலும் ஆரஞ்சு தங்க நிறங்கள் கலந்து ஜொலிக்கும் 'கோல்ட் பிஷ்', பச்சையும், நீலமுமாய் கண்ணைக் கவரும் 'பைட்டர் மீனையுமே' அதிகமானவர்கள் விரும்புகின்றனர். பெரும்பாலான வண்ண மீன் வகைகள் தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்தவை.
இவை தான்சானியா, அமேசான், மலாபி போன்ற ஆறுகளில் காணப்படுகின்றன.
மீன் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை:
கடையிலுள்ள தொட்டியில் மீன்கள் செத்துக் கிடந்தால், அந்தத் தொட்டியில் உள்ள மீன்களை வாங்கக் கூடாது. 'பைட்டர்' போன்ற சண்டைக்கார மீன்களை, பிற மீன்களுடன் போடாதீர்கள், மீன் தொட்டியில் அளவுக்கு அதிகமாக உணவு போட வேண்டாம். மீன்கள் சாப்பிடாமல் விடும் உணவு தொட்டியில் தங்கி விஷமாகலாம்.
எனவே, உரிய இடைவெளியில் தொட்டியைச் சுத்தம் செய்து, தண்ணீரையும் அடிக்கடி மாற்றுங்கள். மீன் வளர்க்கும் நீரில் 'ஆசிட்' அளவை பரிசோதிக்க வேண்டும். சில வகை மீன்களுக்கு, நீங்கள் ஊற்றும் தண்ணீர் ஒத்துக்காமல் போகலாம். ஆகவே, தண்ணீருக்கு ஏற்ற மீன்களை வளருங்கள். நீர் சுத்திகரிப்பு, உயிர் காற்றுக்கு மோட்டார்கள் உள்ளன. நோய்த் தடுப்பு மருந்துகளும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துங்கள். இந்த வழிமுறைகளைக் கடைபிடித்தால் நீங்கள், 'கண்ணே... கலர் மீனே...' என்று பாடி மகிழலாம். காரணம், வண்ண மீன்களைக் கொஞ்ச நேரம் பார்த்தாலும் மனதில் அமைதி மலரும்!
எப்படி உண்டாகிறது நிலநடுக்கம்!
நிலநடுக்கம் ஏன் உண்டாகிறது? பூமிக்கடியில் பாறைகள் உராயும்போது ஒரு வித அதிர்ச்சி அலைகள் உருவாகின்றன. அவை மெதுவாக மேலெழும்பி வந்து, பூமியின் மேற்பகுதியைத் தாக்குகின்றன. தொடர்ந்து இவை தாக்கிக் கொண்டே இருப்பதால், சேர்ந்து வரும் சக்தி ஒருநாள் திடீரென்று வெளிப்பட்டு விடுகிறது. பூமியின் சில பகுதிகள் திடீரென்று ஒன்றையொன்று நெருங்கிக் கடினப்படுவதாலும் நிலநடுக்கம் உருவாகலாம்.சில சமயம் பூமி தானாகவே சில தவறான இட அமைப்புகளைச் சரி செய்து கொள்ளும்போது நிலநடுக்கம் தோன்றலாம். பூமிக்குள் இயற்கையாக நடைபெறும் அணுக்கதிர் வீச்சினால் உருவாகும் வெப்பத்தினாலும் கூட இவை தோன்றலாம். பல நாடுகளில் தொடர்ந்து நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் கூட நில நடுக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நில நடுக்கங்களில் பலவிதம் உண்டு. பூமிக்கடியில் மிக ஆழத்தில் உருவாகி வெளிப்படுவது 'புளுட்டானிக்.' எரிமலைச் சீற்றங்களோடு தோன்றுவது 'வல்கானிக்.' மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவுகளுடன் உண்டாவது, 'டெக்டானிக்'. கடலுக்கடியில் உருவாகிக் கடல் கொந்தளித்துப் பேரலைகளோடு தாக்குவது, 'சப்மரீன்' இப்படிப் பலவகைகள், எங்கே நில நடுக்கம் ஏற்பட்டாலும், பதிவு நிலையங்களில் இருக்கும் 'ஸீஸ்மோகிராப்' என்ற கருவி அதைப் பதிவு செய்துவிடும். நில நடுக்கங்களின் வலிமையைக் குறிப்பிட 'ரிக்டர் அளவு' என்ற அளவை உபயோகிக்கின்றன. ரிக்டர் அளவில் 4-க்கு மேற்பட்ட மதிப்பு கொண்டவை கடுமையானவை.
குறட்டை....
குறட்டையால், அதை விடுபவருக்குப் பிரச்னையில்லை. மாறாக அவர் அருகில் உள்ளவர்களுக்குப் பெருந்தொந்தரவு. கணவன் அல்லது மனைவி குறட்டை விடுகிறவராக இருந்தால் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வாழ்நாள் முழுவதும் அவஸ்தைதான். குறட்டையை நிறுத்த நடைமுறையில் பல்வேறு உபாயங்கள் கூறப்படுவதுண்டு.ஆனால், அவை நிரந்தரத் தீர்வை அளிப்பவை அல்ல. இந்நிலையில் யுகோஸ்லோவியாவைச் சேர்ந்த ஒரு மருந்தியல் நிபுணர், குறட்டைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கும் மருந்தைத் தயாரித்துள்ளார்.
பிரான்ஜோ காஜ் பெஸ் என்ற அந்த நிபுணர், தான் தயாரித்துள்ள மருந்துக்கு வைத்துள்ள பெயர் 'டோகோ ஸ்லீப்'. பனிரெண்டு வகையான இயற்கை மூலிகைகளைக் கொண்டு, தான் தயாரித்துள்ள மருந்தைப் பயன் படுத்தினால் குறட்டை நிற்கும் என்றும், அதே நேரம் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.
குறட்டைப் பழக்கம் உள்ள ஆயிரம் பேருக்கு பிரான்ஜோ இந்த மருந்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்த்தார். அவர்கள் சுமார் 70 நாட்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தினர். அப்போது 580 பேருக்கு குறட்டைப் பிரச்னை நிரந்தரமாகத் தீர்ந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலரிடம் இந்த மருந்து எடுபடவில்லை. அவர்களின் குறட்டை ஜோராகத் தொடர்ந்தது. ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் உள்பட பல வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் பிரான்ஜோவிடம் இருந்து உரிமம் பெற்று இந்த மருந்தைத் தயாரிக்க ஆர்வம் காட்டினர்.
'ட்ரை' பண்ணி பாருங்க கொர்... கொர்... மன்னர்களே!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
