PUBLISHED ON : ஆக 16, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஜப்பான்னா ஜப்பான்தான்!!
உலகம் பூராவும் சில நாடுகளை கொண்டாடுவர். அதில் ஜப்பானுக்கு தலையாய இடம் உண்டு. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதார பொறியியலாளர் என அழைக்கப்படுகின்றனர். அவர்களது சம்பளம் 5000 முதல் 8000 டாலர். ஒரு கழிவறையை சுத்தம் செய்யும் சுகாதார தொழிலாளர் எழுத்து, வாய்மொழி மற்றும் முக்கிய தேர்வின் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால், ஜப்பான் தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.
ஜப்பான் பள்ளிகளில், சேர்ந்த முதல் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது. மற்றவர்களுடன் எப்படி பழகுவது, கல்வியின் நோக்கம் அறிந்து கொள்ளவும், ஒழுக்க நெறிகளை கற்று கொள்ளவும் தான் பயிற்சி அளிக்கின்றனர்.
பள்ளிகளில் மதிய நேர உணவிற்கு பிறகு அவர்கள் பல் துலக்க வேண்டும் என்பது கட்டாயம்.
அவர்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு அரை மணி நேரத்திற்கு பிறகுதான் மீண்டும் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளி மற்றும் கழிவறை களை சுத்தம் செய்கின்றனர்.
நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது பை ஒன்றினை கட்டாயமாக எடுத்து செல்வர். அந்த நாட்டில் உள்ளவர்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு போதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்து கொள்வதில்லை.
வீட்டில் இருப்பவர்களே வீட்டையும், பிள்ளைகளையும் கவனித்து கொள்கின்றனர். உணவு கடைகளில் சாப்பிடும் உணவை ஜப்பான் மக்கள் வீணாக்காமல் தமக்கு தேவையான அளவில் மட்டும் சாப்பிடுகின்றனர். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் ரயில்கள் தாமதமாக வந்த நேரம் ஆக கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே. இதெல்லாம் ஜப்பானின் சிறப்புகளில் மிக மிக சிறிய சாம்பிள்தான். நம் நாடும் இப்படி ஆக வேண்டும். அவர்களின் நாடு தலை சிறந்து விளங்குவதற்கு இரண்டு குணங்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
தனிமனித ஒழுக்கம், அளவற்ற தேசப்பற்று.
ஜப்பானியர்களிடம் அதீத தேசப்பற்று உண்டு.
என் தேசம் சிறந்ததாக விளங்க வேண்டும் என்ற தீரா தாகத்தால் அவர்கள் வாழ்வு நடக்கிறது. தேசம் சிறப்பாக திகழ நான் சிறப்பானவ னாக வேண்டும் என்று தங்களை தாங்களே அறிவிலும், ஆரோக்கியத்திலும், ஒழுக்கத் திலும் செதுக்கி கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட மிகச் சிறந்த குடிமகன்கள் இருப்பதால்தான் அந்நாடு மிகச் சிறந்ததாக திகழ்கிறது.
வெடித்த உடனே!
அடிக்கடி நாம் கேள்விப்படுவதில்லை. ஆனாலும் எரிமலைகள் ஆபத்தானவைதான். கடந்த 600 ஆண்டுகளில் மட்டும் எரி மலைச் சீற்றத்தால் நேரடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம். ஆனால், ஆபத் தான இதே எரிமலைகள் பல வழிகளில் நமக்கு உதவியும் செய்கின்றன.
எரிமலைகளிலிருந்து இயற்கை எரிவாயும் கிடைக்கிறது. ஐஸ்லாந்து நாட்டில் 85 சதவீத வீடுகளில் எரிமலைகளிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவையே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். எரிமலைகள் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் இயற்கையாகவே சூடேற்றப்படுவதால், அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
கடல் நடுவே உள்ள எரிமலைகள் வெடித்து, அதன் எரிமலை குழம்புகள் நீரில் விழுந்து கெட்டியாவதால் புதிய தீவுகள் நமக்கு கிடைக்கின்றன. எரிமலை வெடிப்பின்போது வெளி வரும் சாம்பல் மற்றும் பலவித தாதுக்கள் மண்ணில் கலப்பதால், சுற்றியுள்ள விளைநிலங்கள் வளப்படுகின்றன.
எரிமலையில் இருந்து தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட பல உலோகங்கள் வெளிப்படலாம். உதாரணத்துக்கு, 1993ல் கொலம்பியாவில் உள்ள கலராஸ் என்ற எரிமலை வெடித்தபோது, ஒரு பவுண்டுக்கும் அதிகமான தங்கம் வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் சில எரிமலைகள் வெடித்ததால் வெளிப்பட்ட அதிக அளவு ஆற்றல் கார்பன்கள்தான் வைரங்களாக மாறி, இன்னும் தென் ஆப்பிரிக்க சுரங்கங்களில் தோண்ட தோண்ட கிடைப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கை எல்லா வகையிலும் நமக்கு கொடுக்கவே செய்கிறது. நாமும் நம் பங்கிற்கு மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வோம்.
கிராஸ் பிரீட்!
நாய்களில் வெவ்வேறு இனத்தை சேர வைத்து புதிய இனத்தை உருவாக்குவர். நாட்டு நாயையும், உயர்சாதி நாயையும் இணைத்து புதிய இனம் பிறக்கும். அது நாட்டு நாயின் குணநலன்களையும், உயர்சாதி நாயின் குணநலன்களையும் பெற்று மிக சிறந்ததாக விளங்கும்.
பயிர் வகைகளில் கலப்பினங்கள் புகுத்திய மனிதன், விலங்கினத்திலும் கலப்பின ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.
கலப்பினத்தில் பிறக்கும் குட்டிகளுக்கு, HYBRID ANIMALS என்று பெயர். அவ்வகையில் பிறக்கும் புதிய இனத்தின் பெயர் அவற்றின் தாய்-தந்தை பெயரிலிருந்து பெறப்படும்.
ஆண் சிங்கத்தையும், பெண் புலியையும் சேர வைத்து அதன் மூலம் பிறக்கும் குட்டிக்கு லைகர் (LIGER)என்று பெயர்.
இதேபோல் வரிக்குதிரைக்கும், கழுதைக்கும் பிறக்கும் குட்டிக்கு ஜீடாங்க் (Zeedonk) என்று பெயர்.
ஜாகுவார் சிறுத்தைக்கும், சிங்கத்துக்கும் பிறக்கும் குட்டிக்கு ஜாக்லியன் (Jaglion) என்று பெயர் சூட்டுகின்றனர்.
அதே நேரம் இவ்வாறு கலப்பினத்தில் பிறக்கும் குட்டிகள் வளர்ச்சி குறைவானதாகவோ அல்லது அதீத வளர்ச்சியுடனோ பிறக்கின்றன. இந்த குறை பாட்டுக்கு (Growth Dysplasia) என்று பெயர்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'அவல் மோர்க்கூழ்' செய்முறை நேரம்.
தேவையானவை: அவல்-2 கப், லேசாக புளித்த கெட்டி மோர்-ஒரு கப், பச்சை மிளகாய்-4, கடுகு-ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு- தேவையான அளவு.
செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
என்றும் அன்புடன், அங்குராசு.
