தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !


PUBLISHED ON : அக் 01, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு.

ஆபீஸ் பாய் - சி.ஏ.பட்டம் !

பிறந்தது ஏழை குடும்பத்தில். வசிப்பது குடிசையில்; வேலையோ ஆபிஸ் பாய். படிப்பின் மீது இருந்த ஆர்வம், பி.காம்., முடிக்க வைத்தது. சி.ஏ., படிப்பிலும் சாதிக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அருண். நெசவுத்தறி தொழிலாளியான இவர், பிழைப்பு தேடி குடும்பத்துடன் சூரத்தில் குடியேறினார். இவரது மனைவி நிர்மலா, வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த ஏழை தம்பதி, குடும்பத்துடன் சூரத்தில் லிம்பாய்த் என்ற குடிசை பகுதியில், தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மகன் சைலேஷ்(24), சர்வஜனிக் உயர்நிலை பள்ளியில் மராத்தி மொழியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.காம்., பட்டப்படிப்பை முடித்தார். தனது ஆசிரியர் ஜாய் சாரியா என்பவரின் தொழில் கல்வி நிறுவனத்தில், அலுவலக உதவியாளராக சேர்ந்தார் சைலேஷ். அதே நிறுவனத்தில், தனது சி.ஏ., படிப்பை தொடர்ந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரது கடின உழைப்பு காரணமாக, சி.ஏ., படிப்பின் இரு பிரிவுகளிலும் 220, 210 என்று அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். வேலை நேரத்தின் இடையே அவருக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை கூட படிப்பிற்காக செலவிடுவது சைலேஷின் வாடிக்கை. 'குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 6 ஆயிரம். அதில் என் படிப்பு செலவு என்பது மிகவும் கடினம். அதனால்தான் வேலைக்கு சென்று கொண்டே படிக்க முடிவு செய்தேன். தினமும் சுமார் 7 கி.மீ., பயணம், படிப்பு, வேலை என்று நான் எடுத்த முயற்சிக்கும், உழைப்பிற்கும் இப்போது வெற்றியும் கிட்டியுள்ளது. என்னுடைய குறிக்கோள், சொந்தமாக கணக்கு தணிக்கை ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டும் என்பதுதான். அதற்கான முதல் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என சந்தோஷத்துடன் சைலேஷ் கூறினார்.

சைலேஷைப்பற்றி அவரது ஆசிரியர் ஜாய் சாரியா கூறுகையில், 'எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியுடன் உழைப்பவர்' என்றார்.

காய்கறி நிறைய சேர்த்து கொள்க !

வாரத்தில் 5 நாட்களுக்கு உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்து கொண்டால், உடலில் விஷத் தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர், உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதற்காக தேர்தெடுக்கப்பட்ட ஒரு குழுவை சீயோலில் தங்க வைத்தனர். அந்த நாட்களில் சைவ உணவே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு முன்பும், 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில், உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு, மிகவும் குறைந்திருப்பது தெரிய வந்தது. வாரத்தின் மீதி 2 நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் ரகங்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு எடுத்த சிறுநீர் பரிசோதனையில், விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு அதிகரித்திருந்தது. எனவே, வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சைவ, அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றன. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க, வாரத்தில் 5 நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம். சைவ உணவில் உள்ள சத்துக்கள், அவை தரும் ஆரோக்கியம் வேறு எதிலும் இல்லை. தினப்படி சாதாரணமாய் கிடைக்கும் கீரைகளில் உள்ள சத்து வேறு எந்த அசைவ உணவில் உள்ளது? மேலை நாடுகள் அசைவத்தில் 'அ'வை விட்டுவிட்டு உண்கின்றனர். காய்கறி சாப்பிடணும், நிறைய சாப்பிடணும். ஆனால், அதற்கு முன்பு ஒண்ணு செய்யனும். என்ன தெரியுமா? நிறைய பணம் சம்பாதிக்கனும். காய்கறி என்ன விலை விக்குது இல்ல...


அம்மா ! செஞ்சுதாங்கம்மா ப்ளீஸ் !
இது 'ஓட்ஸ் பிசிபேளாபாத்' செய்முறை நேரம்.

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்ந்த கலவை - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், புளி கரைசல் - கால் கப், மோர் மிளகாய் - 2, நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.

பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 5, மிளகு - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா - அரை டேபிள் ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - ஒரு பெரிய துண்டு, ஏலக்காய் - 2, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

துவரம் பருப்பை குழைய வேகவிடவும். ஓட்சை வெந்நீரில் ஊற வைக்கவும். காய்களில் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பொடிக்க வைத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்து பொடித்து கொள்ளவும். துவரம் பருப்பு, ஓட்ஸ், வெந்த காய்கறிகள், புளித்தண்ணீர், வறுத்து அரைத்த பொடி, உப்பு கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்து கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும், கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து கொட்டி கிளறவும். கமகமக்கும் ஓட்ஸ் பிசிபேளாபாத் ரெடி!


பைலட்டான பாட்டி !

அமெரிக்க துணை ராணுவ அமைச்சர் டொனால்டு குவாகல்ஸ் என்பவரின் மனைவி ஏழு பேரன், பேத்திகளை உடையவர். அவர் விமானம் ஓட்ட கற்று, பைலட் லைசென்ஸ் வாங்கி கொண்டார். அப்போது ஒருவர் அவரிடம், 'ஏன் இந்த வயதில் விமானம் ஓட்ட கற்று கொண்டீர்கள்?' என்று கேட்டார். 'இளமைக்கு திரும்பி போய் கற்பது இனி சாத்தியமில்லை என்பதால்தான்' என்றார் அந்த பாட்டி. பறக்கும் பட்டு பாட்டி!

ஒற்றுமை உண்டு !

நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபலமாக விளங்கிய பி.டி.பார்ணம் ஒரு மிகச் சிறந்த சர்க்கஸ்காரர். அவர் ஒரே கூண்டில் சிங்கம், புலி, ஆட்டுக்குட்டி இவற்றை அடைத்து வைத்து மக்களுக்கு தொடர்ந்து வித்தை காட்டி வந்தார். பார்வையாளர்களில் ஒருவர் மிகவும் ஆச்சரியப்பட்டு போனார். 'இந்த மிருகங்கள் எவ்வளவு நாட்களாக ஒற்றுமையாக ஒரே கூண்டில்?' என்று ஆர்வமாக கேட்டார். பார்ணம் பதிலளித்தார் கூலாக...'எட்டு மாதங்களாக. ஆனால், ஆட்டுக்குட்டியை மாத்திரம் தினம் புதிதாக மாற்றி வருகிறேன்!'

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us