PUBLISHED ON : ஏப் 01, 2011

அனைவருக்கும் எனது அன்பு.
லுங்கி அணிந்து படுத்து கொண்டு சினிமா பார்க்கலாம் பள்ளியில்!
தேர்தல் நெருங்குவதால், சில வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்திருக்கும். சில வகுப்புகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிந்துவிடும். தேர்தலால் இந்த முறை மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிமாகிவிட்டது. தேர்வு டென்ஷன் பெரும்பாலான மாணவர்களுக்கு முடிந்திருக்கும். பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், மிக முக்கிய பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல், மே, மாதங்கள் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் விடுமுறை.
இனி படிக்க தேவையில்லை!
ஜூன் மாதத்திலிருந்து பள்ளி தொடங்கி விடும். படிப்பு, படிப்பு என்று நாட்கள் நகரும். இதோடு, வீட்டிற்கு வந்தவுடன் ட்யூஷன். குழந்தைகளுக்கான உலக அமைப்பு, இது போன்ற கல்வி முறையை குறை கூறுகிறது. ஒரு நாடு முன்னேற அந்த நாட்டின் எதிர்காலமான இன்றைய மாணவர்கள் சிறந்த குடிமக்களாக திகழ இந்த கல்விமுறை மிக தவறு என்கிறது அந்த அமைப்பு. இந்திய மாணவர்கள் முன்னேற அந்த அமைப்பு ஏராளமான பணம் தர உள்ளது. ஆனால் அவ்வமைப்பு சில விதிமுறைகளை கடைப் பிடித்தால் தான் பணம் தரும். அந்த விதிமுறைகள் தான் என்னென்ன? நம் நாட்டில் இந்த கல்வி முறை வரப்போகிறது!
புத்தகம், பை இல்லை!
இனி எந்த வகுப்புகளுக்கும் புத்தகமே இருக்க கூடாது என்பது ஒரு விதிமுறை. அதாவது, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, அறிவியல், அதன் பிரிவுகள் சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம், கம்ப்யூட்டர், கால்குலேட்டர், எக்ஸ்லேட்டர் என்று எந்த பாடமும் கிடையாது. அதற்கான பாடப்புத்தகமும் கிடையாது. பாடப்புத்தகமே இல்லை என்றால் அப்புறம் நோட்டுக்கு என்ன வேலை! நோட்டுகளும் கிடையாது.
நோட்டுகள் இல்லை என்றால், அப்புறம் பொதி மூட்டை சுமக்கும் பை எதற்கு? பைகளும் கிடையாது. அப்புறம் என்ன தான் நடக்கும். பள்ளியில் பாடம் நடத்தப்படும் அந்த பாடங்களை, ஒவ்வொரு மாணவர் களுக்கும் ஆசிரியரே எழுதி தர வேண்டும். அந்த நோட்டுகள் பள்ளியிலேயே இருக்கும். பாடம் நடத்த, மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்மதித்தால் மட்டுமே பாடம் நடத்த வேண்டும். ஆசிரியர்கள் கேள்வி கேட்க கூடாது. தேர்வுகள் வைக்க கூடாது. மாணவர்கள் ஆசிரியரை கேள்வி கேட்பார்கள். எந்த ஆசிரியர் சிறந்தவர் என மாணவர்கள் தேர்வு வைப்பார்கள். மாணவர்கள் பாடம் நடத்த வேண்டாம் என்றால், ஆசிரியர்கள் அவர்களின் பொழுதுபோக்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த பாடுதல், ஆடுதல், கதை சொல்லுதல் மிமிக்ரி செய்தல் போன்ற திறமைகளை வெளிப் படுத்தலாம். மாணவர்களுக்கு 'போர்' அடிக்க கூடாது. மாணவர்கள் இதற்கும் மார்க் போடுவார்கள். ஆசிரியர்களின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு அலுத்துவிட்டால்/அறுத்து விட்டால் (பிளேடு) அவர்களுக்கு பிடித்த திரைப் படங்கள் கரும்பலகை திரையில் போட்டு காட்ட வேண்டும். புதுபுது படங்களாக போட வேண்டும். பெரிய சைஸ் 'டிவி'யும் இருக்க வேண்டும். அதோடு லேட்டஸ்ட் கேம்ஸ் வரை லோடு செய்யப்பட்ட 3-4 கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உள்ள கம்ப்யூட்டர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டர். அதோடு சாட் பண்ண கேமரா அதிகவேக இன்டர்நெட் வசதிகளும் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.
யூனிபார்ம் உண்டா?
எந்த சீருடையும் கிடையாது. ஒவ்வொரு மாணவரும் தனக்கு பிடித்த உடைகளை அணியலாம். எந்த தடையும் கிடையாது. லுங்கி, வேட்டி, நைட்டி என எதையும் போட்டு வரலாம். டை, ஷீ அதெல்லாம் கிடையாது. அதோடு மாணவிகள் எவ்வளவு நகைகள் வேண்டு மானாலும் அணிந்து வரலாம். தலைமுடியை எந்த டிசைனிலும் மாற்றி கொள்ளலாம். எந்த பூவையும் வைக்கலாம். தலைமுடியை கலரிங் பண்ணலாம். காதணி, கையணி, காலணி, கழுத்தணி என, எதையும் அணியலாம்.
அட்டென்டன்ஸ் !
காலை 9 மணி முதல் மாலை 4 வரை பள்ளி நேரம். சரியாய் வந்துவிட வேண்டும். பள்ளிக்கு விடுமுறையே போடக்கூடாது. இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லவே இல்லை. பள்ளிக்கு போனால் போகலாம். அல்லது வீட்டிலேயே தூங்கலாம். மாணவர்கள் விரும்பி னால் பள்ளிலேயே ஏ.சி அறையில் தூங்கலாம். பள்ளியிலிருந்து நீங்கள் இன்றைக்கு பள்ளிக்கு வருவீர்களா?! என்று கேட்பார்கள் மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்.
வீக் என்ட்!
சனி, ஞாயிறு கிழமைகள் வீக் என்ட் எனப்படும். அன்று கண்டிப்பாய் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். ஏனெனில் வீக் என்டில், டூர் அழைத்து போவார்கள். ஊட்டி, கொடைக் கானல் மாநிலத்திற்குள் டூர். டெல்லி, மும்பை என நாட்டிற்குள் டூர்.
பெரிய வகுப்பு மாணவர்களுக்கு சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளுக்கு டூர் அழைத்து போவார்கள். திங்களன்று பள்ளிக்கு வர வேண்டும். பாடங்கள் நடத்த வேண்டும். காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு தேர்வுகளுக்கு படிக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் மாத கணக்கில் கூட டூர் காலம் நீளும்.
ஸ்நாக்ஸ்-டிபன்-சாப்பாடு!
மாணவர்களுக்கு பிடித்த அனைத்து நொறுக்குத் தீனியும் தரப்படும். கோன் ஐஸ் முதல் கப் ஐஸ், குல்பி ஐஸ் என எல்லா ஐஸ் வகைளும் குளிர, குளிர பள்ளி நிர்வாகம் தரும். காபி, டீ, என்று சூடான பானங்களும் பெப்ஸி, தம்ஸ்-அப், கோக் என்று குளிர் பானங்களும் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
இந்திய, சீனா, என எல்லா நாட்டு உணவும் ரெடியாய் இருக்கும். மாணவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
ஜூனிலிருந்து ஜாலி!
இந்த வருடத்திலிருந்து மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலிதான். இனி ஜீன் என்றோ, பள்ளி என்றோ படிப்பு என்றோ, பரீட்சை என்றோ கவலையே பட வேண்டாம். இந்த அறிவிப்பு இன்றைய மாதத்தின் முதல் நாள் வந்திருக்கிறது என்பதை மாணவர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்! என்ன ஆஹா...அப்படி ஒரு ஸ்கூலா? அது எங்கே உள்ளதுங்க... என வாய் பிளந்து நிற்கும் குட்டீஸ்களுக்கு ஏப்ரல் பூல் கோடு ஸ்கூல் சன்டே மன்டே மார்னிங் ஸ்கூல்!
ஹ...ஹா...
அன்புடன் அங்குராசு.
