PUBLISHED ON : மே 21, 2022

வருமுன் காப்போம்!
நோயின்றி மக்கள் வாழ வளங்களை தந்துள்ளது இயற்கை. அதில், எலுமிச்சை பழம் முக்கியமானது.
இது, ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். பெரும்பாலும், வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்கிறது.
ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுகிறது.
இதில், புரதம், கொழுப்பு, பொட்டாஷியம், மாங்னீஷியம், குளோரின், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துகள் உள்ளன.
இவை, ரத்தம், வயிறு, மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் என, எல்லா உறுப்புகளையும் சிறப்பாக செயல்பட வைக்கும்.
எலுமிச்சையை தொடர்ந்து உபயோகித்தால்...
* உடல் சூட்டை தணித்து, பித்த கிறுகிறுப்பை போக்கும்
* சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும்
* முகப்பரு தோன்றாது
* உடலில், பளபளப்பு ஏற்படும்
* வயிற்றின் உள் உறுப்புகள் துாய்மை பெறும்
* நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்
* நுரையீரல் தசையை காக்கும்
* இதயத்தை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்
* சிறுநீரில் சர்க்கரை அளவை குறைக்கும்.
உணவில், எலுமிச்சை பழம் அதிகம் பயன்படுத்துவோர், ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எலுமிச்சை சாறை, நீரில் கலந்து, தினமும், மூன்று வேளை அருந்தலாம்.
பசி, மந்தம், ருசியின்மை, மதமதப்பு, வாயுவால் ஏற்படும் சதை இறுக்கம், நரம்பு இறுக்கம், கொட்டாவி போன்ற தொல்லைகள் ஏற்படாது.
மோரில், எலுமிச்சை சாறு, இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை போட்டு, தினமும் நான்கு முறை அருந்தலாம்.
எலுமிச்சை சாறுடன், தக்காளி, தேன், நீர் கலந்து, தினமும் மூன்று வேளை குடிக்கலாம். இதனால், கல்லீரல் சீரடையும். மூளை, இதயம், இரைப்பை, சிறுநீர்ப்பை, ஜீரண மண்டல உறுப்புக்கள் சிறப்பாக இயங்கும்.
வாந்தி, பேதியால், உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதற்கு நிவாரணமாக, எலுமிச்சை சாறு கலந்த கஞ்சி அடிக்கடி கொடுக்கலாம்.
ஊறுகாய், மருந்து, மிட்டாய், பழப்பாகு தயாரிக்கப் பயன்படுகிறது; நறுமண எண்ணெய், சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.
இயற்கை தந்துள்ள அரிய கொடை, எலுமிச்சை. இதை, தினமும் பயன்படுத்தி, ஆரோக்கியமாக வாழ்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு
