
பூவுக்குள் ரகசியம்!
எல்லா பூக்களும், கண்கவர் வண்ணங்களில் இருப்பதில்லை. பகல் நேரத்தில் பூப்பவை மட்டுமே, சிவப்பு, மஞ்சள், ஊதா, நீலம் என கவரும் நிறங்களுடன் காட்சி தரும். மாலையில் மலரும் மல்லி, முல்லை போன்றவை வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இதற்கு உரிய காரணம் உள்ளது. அதை தெரிந்துகொள்வோம்...
தாவரங்களால் நகர இயலாது. எனவே, மகரந்தச் சேர்க்கைக்கு, பூச்சி, பறவை, தேனீ போன்ற உயிரினங்களையும், காற்றையும் நம்புகின்றன. பூச்சி, வண்டு இனங்களுக்கு, பகலில் நிறங்களை காணும் திறன் அபாரம். அவற்றை கவரும் வகையில் வண்ணமயமாக பூக்கின்றன தாவரங்கள்.
பூவில் அமர்ந்து தேனைச் சுவைத்த பின், அடுத்த மலருக்கு தாவுகிறது வண்டு. அதில் ஒட்டும் மகரந்த துாள், மற்றொரு தாவரத்துக்கு எளிதாக பரவுகிறது. இதனால் மகரந்தச் சேர்க்கை மிக இயல்பாக நடைபெறுகிறது.
இரவில் மலரும் பூக்கள், கண்கவர் வண்ணங்களில் இருந்தால் பூச்சிகள் பார்வையில் விழாது. வெள்ளை நிறத்தில் இருப்பதால் வண்டு, பூச்சிகளுக்கு எளிதில் அடையாளம் தெரியும். அத்துடன், நறுமணத்தையும் வெளியிடுவதால் எளிதாக இனம் கண்டு பூக்களை அடைகின்றன பூச்சிகள். இரவிலும் மகரந்த சேர்க்கை இயல்பாக நடக்கிறது.
இயற்கையின் இது போன்ற அற்புதங்களால் இந்த உலகம் வாழுகிறது.
மாவீரன் நெப்போலியன்!
ஐரோப்பிய நாடான இத்தாலி அருகே கோர்சிகா தீவில், 1769ல் பிறந்தார் நெப்போலியன்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கனரக ஆயுத பிரிவில் வேலை செய்தார். போர்களை வழி நடத்தியதன் மூலம், அந்த நாட்டின் கன்சலாகப் பதவி ஏற்றார். அடுத்த ஐந்தாம் ஆண்டிலே பிரான்ஸ் பேரரசராக அரியணை ஏறினார்.
தொடர்ந்து, 10 ஆண்டுகள் போர்களில் ஈடுபட்டார். ஐரோப்பாவில் பெரும்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உலகின் மிக முக்கிய ஆளுமையாக திகழ்ந்தார்.
கட்டுப்பாட்டில் வந்த நாடுகளில், உறவினர், நண்பர்களை அரசர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தார்.
ஆசிய - ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யாவை ஆக்கிரமிக்க முயன்றபோது, தோல்வியைச் சந்தித்தார். அது முதல் அவருக்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
அவருக்கு எதிராக ஒரு அரசியல் கூட்டணி ஏற்பட்டது. அது பதவியில் இருந்து அவரை விலக்கி, எல்பா தீவுக்கு நாடு கடத்தியது.
மனம் தளராத நெப்போலியன், படையை சேர்த்து, ஒரே ஆண்டுக்குள் பிரான்சை மீண்டும் கைப்பற்றினார். வாட்டலுா என்ற இடத்தில், 1815ல் நடந்த போரில் தோல்வி அடைந்தார். ஆறு ஆண்டுகள், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள புனித ஹெலனா தீவில் வாழ்ந்தார். இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 1821ல் இறந்தார்.
மனம் தளராமல் முயற்சி செய்தால், வெற்றி ஈட்டுவது சுலபம் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் நெப்போலியன்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

