PUBLISHED ON : ஜூலை 15, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
கலாம் காலம்!
நமது அன்பு கலாம் அவர்களுக்கு, ரம்ஜான் அன்று 'இப்தார் விருந்து' கொடுத்து அந்த பண்டிகையை குடியரசு தலைவர் மாளிகையில் ஆடம்பரமாக கொண்டாட வாய்ப்பு இருந்தும் அந்த விருந்துக்கான செலவு இரண்டரை லட்சம் ரூபாயை அநாதை இல்லங்களை தேர்வு செய்து, அந்த மக்களுக்கு உணவு அளிக்க செய்தார்.
அதோடு சாதி-மத பேதமற்ற அந்த அநாதை இல்லத்துக்கு தன் சம்பளத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை தனியே அனுப்பி வைத்தார். இந்தியாவில் முதல் குடிமகனாக பதவியில் வீற்றிருந்தபோது, ஒவ்வொரு விஷயத்திலும் நம் அன்பு கலாம் இப்படித்தான் நடந்து கொண்டார்.
ஆரோக்கியம் தரும் மீன்கள்!
வீடுகளில் பொழுதுபோக்கிற்காக வளர்க்கப்பட்ட கலர் மீன்கள் அழகிற்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் வாஸ்து சாஸ்திர முறையில் வீடுகளில் மீன் தொட்டி அமைத்து மீன்களை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் கலர் மீன்கள் விற்பனை செய்யும் அக்குவாரியங்கள் ஏராளமாய் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்துள்ளன. உள்நாட்டு மீன்கள் மட்மல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கலர் மீன்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டு மீன்களில் பிரானா, அரவனா, எலிபண்ட் நோய், டிஸ்கஸ், லைன்ஹெட் கோல்டு பிஷ், கூலி லோச்சர், கிளவுன் லோச், லோட் லைட் டெட்ரா ஆகிய கலர் மீன்களுக்குதான் மவுசு அதிகம். இதில் பிரானா வகை மீன்கள் பற்றிய செய்தி மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதாவது ஆயிரம் பிரானா மீன்கள் உள்ள ஒரு குளத்தில் உயிருள்ள ஒரு குதிரையை இறக்கி விட்டாலும் சில மணி நேரத்தில் குதிரையை சாப்பிடும் சக்தி வாய்ந்தவை என்பதுதான்.
அடுத்தது 'அரவனா'!
சிங்கப்பூரில் இந்த வகை மீன்கள் பக்தியுடன் வளர்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் 'அரவனா' மீன் 'லட்சுமி' கடாட்சம் பொருந்தியதாக கருதுகின்றனர். இந்திய மீன்களான மாலிஸ், கோல்டு பிஷ், ஏஞ்சல், டெட்ராஸ், கப்பீஸ் பார்ஸ், பைட்டர் ஆகிய லோக்கல் கலர் மீன்களுக்கும், நட்சத்திர ஆமைகளுக்கும் வெளிநாடுகளில் ஏகப்பட்ட கிராக்கி. கலர் மீன்கள் ஐந்து ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த பட்சமாக கப்பீஸ் வகை மீன்களும், அதிகபட்ச விலையாக அரவனா மீன்களும் விலை போகின்றன. இந்த கலர் மீன்களில் மருத்துவ துறையில் உதவும் மீன்களும் உள்ளன.
ஏஞ்சல்ஸ், கோல்டு பிஷ், பைட்டர் ஆகியவற்றுடன் காலை, மாலையும் ஒரு மணி நேரம் செலவழித்தால் 'பிளட் பிரஷர்' அடியோடு குறைய வாய்ப்பு உள்ளது. இத்தகைய மீன்களை 'ஸ்லோ மூவிஸ் பிஷ்' என அழைக்கின்றன.
வாஸ்து சாஸ்திர முறைப்படி முக்கிய நிறுவனங்கள், கட்டிடங்களில் கலர் மீன் தொட்டி அமைத்து வளர்க்கப்படுகின்றன.
வாஸ்துபடி மீன் தொட்டி வைத்து வளர்த்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், உடல் நோய் குறைவதோடு குடும்பம் கஷ்டமும் நீங்கும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள். அரவனா மற்றும் பிளாக், மாலிஸ் ஆகிய மீன்கள்தான் இந்த வாஸ்து முறைக்காக வாங்கப்படுகின்றன. கலர் மீன்களின் ஆயுசு நான்கு ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுவரைதான். மீன்கள் வளர்க்க தட்ப வெப்ப நிலை உணவு, ஆக்ஸிஜன்தான் முக்கியம். இதன் தட்பவெப்பநிலை 25 டிகிரி முதல் 30 டிகிரி சென்டிகிரேட் ஆகும். மீன்கள் வளர்ப்பதற்கு மாதம் 100 ரூபாய் மட்டுமே செலவாகும்.
அதற்கு தேவையான உணவு மற்றும் ஆக்ஸிஜன் மூலப் பொருட்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மீன் தொட்டியில் அடிக்கடி தண்ணீர் மாற்றக்கூடாது. அப்படி தண்ணீர் மாற்றினால் வெப்ப நிலை மாறி மீன்கள் இறக்க நேரிடும். மீன்களுக்கு உணவும் அளவிற்கு அதிகமாக கொடுக்க கூடாது. மீன் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க 'சக்கர் மவுத்' எனப்படும் மீனை தொட்டியில் வளர்க்கலாம்.
இதற்கு 'டேங்க் கிளீனர்' என்ற பெயரும் உண்டு. அது தண்ணீரில் ஏற்படும் அழுக்குகளை உறிஞ்சி விடுகிறது. மீன்களும் மனிதர்களைபோல் நோய் வாய்ப்படும். அப்படி நோய்வாய்ப்பட்ட மீன்கள் மீது காற்று முட்டை ஒட்டிக் கொண்டும், செதில்கள் சிதைத்தும் காணப்படும். இதற்கு காரணம் தண்ணீர் குளிர்ந்து உறைந்து போவதால்தான். இதற்கு தண்ணீர் வெப்ப நிலை மாறாமல் இருக்க 'ஆட்டோமேட்டிக் வாட்டர் டெம்பரேச்சர்' பயன்படுத்தலாம்.
வெளியூர் செல்லும் கால கட்டங்களில் மீன்களும் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பதற்கான 'ஆட்டோமேட்டிக் பீடர்' என்ற சாதனங்களும் தற்போது வந்து விட்டன. அதில் உள்ள டைமரில் செட் செய்தால் தேவையான உணவை குறித்த நேரத்தில் மீன் தொட்டியில் போட்டுவிடும். பொழுதுபோக்கிற்கு மீன்கள் வளர்ப்பதால் உடலும், உள்ளமும் நிம்மதி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாண்டுகளை மேய்ப்பதற்கே இங்கு பெண்டு சுழல்கிறது. இதில் மீன்களா என யோசிக்க வேண்டாம். வாண்டுகளையே மீன்களை வளர்க்க பழக்கி விடுங்கள். வாண்டுகளின் அட்டகாசம் குறையும். வாண்டுகளிடம் அன்பும், அக்கறையும் பொறுப்பு உணர்வும் மலரும்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
அற்புதமான மாலை நேர டிபன் 'ஸ்டப்டு சில்லி பஜ்ஜி' செய்முறை நேரம்.
தேவையானவை: கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், எள்-ஒரு டீஸ்பூன், கொப்பரை துருவல்-கால் கப், சர்க்கரை-கால் டீஸ்பூன், சீரகத்தூள்-கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன், தனியாத்தூள்-ஒரு டீஸ்பூன், நெய், உப்பு தேவையான அளவு.
மேல் மாவுக்கு: கடலை மாவு -ஒரு கப், அரிசி மாவு-ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில், எள்ளை வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் நெய் விட்டு கடலை மாவை வறுத்து, கொப்பரைத் துருவல், சர்க்கரை, சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தாள், உப்பு சேர்த்து அடுப்பை 'சிம்'மில் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். வறுத்த எள்ளை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள ஸ்டப்ரெடி.
பஜ்ஜி மிளகாயை ஒன்றரை இன்ச் நீளத்துக்கு கீறி உள்ளே இருக்கும் விதைகள் எடுத்து விடவும். அதனுள் தயார் செய்த கலவையை வைத்து ஸ்டப் செய்யவும். இதேபோல் ஒவ்வொரு மிளகாயையும் ஸ்டப் செய்யவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்து கொள்ளவும். ஸ்டப் செய்த மிளகாய்களை அதில் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க... சூடான ஸ்டப்டு சில்லி பஜ்ஜி ரெடி.
அன்புடன் அங்குராசு.
***
