PUBLISHED ON : ஜூலை 03, 2015

விருதுநகர் என்னும் ஊரில் வசிக்கும் வணிகன் ஒருவனுக்கு, முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான். வேலைக்காரனை அழைத்த வணிகன், ''நம் வண்டியை எடுத்துக் கொண்டு காட்டுக்குப் போ. அங்கே மரங்களை சிலர் வெட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பார்கள். அதே போல, நீயும் மரங்களை வெட்டிக் கொண்டு வா,'' என்றான்.
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிச் சென்றான்.
அங்கே சிலர் மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தனர். சிலர் கீழே விழுந்த மரத்துண்டுகளை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அவனால், சிரிப்பை அடக்க முடியவில்லை.
'என்ன! இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை நிறுத்தினால் மரம் அதில் சரியாக விழும். அப்படியே கொண்டு வரலாமே! எதற்காக மரத்தைத் தரையில் கிடத்திய பிறகு வண்டியில் போட வேண்டும்' என்று நினைத்தான்.
'என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்ட வேண்டும். எல்லாரும் என்னைப் புகழ வேண்டும்' என்று நினைத்தான்.
தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தைத் தேர்ந்து எடுத்தான்.
கோடாரியால் அந்த மரத்தின் அடிப் பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். அந்த மரம் விழக்கூடிய இடத்தில் வண்டியை நிறுத்தினான்.
மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், 'ஏன் இவன் இப்படிப் பைத்தியக்காரத் தனமாக வேலை செய்கிறான்' என்று நினைத்தனர்.
மீண்டும் மரம் வெட்டத் தொடங்கினான் சிறிது நேரத்தில் அந்த மரம் சடசடவென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது.
அவ்வளவுதான். வண்டி தூள் தூளானது.
இதைக் கண்ட அவன் திகைத்தான்.
தன் திட்டத்தில் என்ன குறை என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
'என் திட்டம் நல்ல திட்டம்தான். வண்டிக்குத் தான் வலிமை இல்லை' என்ற முடிவுடன் வீடு திரும்பினான்.
நடந்ததை அறிந்த வணிகன், ''முட்டாளாக இருக்கிறாயே? இப்படிச் செய்யலாமா?'' என்று அவனைத் திட்டினான்.
சில நாட்கள் சென்றன.
திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்தது. வணிகனிடம் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெய் இருந்தது. பதுக்கி வைத்தால், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்தான்.
வேலைக்காரனை அழைத்து, ''கடையில் இருக்கும் மண்ணென்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு எடுத்து வா. நம் வீட்டுத்தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக்கூடாது,'' என்றான்.
வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் அவன்.
ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதில் உள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லா பீப்பாய் எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.
'இந்தக் காலி பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்றும் சொல்ல வில்லையே... சரி அவரையே கேட்டு விடுவோம்' என்று நினைத்தான்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பினான்.
'ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்து விட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது?'' என்று கேட்டான்.
வணிகனுக்கு உண்மை புலப்படத் தொடங்கியது.
''ஐயோ மண்ணெண்ணெய் எல்லாம் போச்சே!'' என்று அலறினான்.
அன்றே அவனை வேலையில் இருந்து நீக்கினான்.
***
