PUBLISHED ON : நவ 26, 2022

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 9ம் வகுப்பு படித்தேன். கணக்கு ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஒரு நாள் வீட்டுப் பாடம் எழுதாமல் சென்று விட்டேன். அதற்கு உரிய காரணம் கேட்டார்.
சாதுர்யமாக, 'ஐயா... வீட்டுப் பாடம் எழுதி, வீட்டில் மறந்து வைத்து வந்து விட்டேன்...' என்று பொய் கூறினேன். அது மதிய உணவுக்கு முந்தைய வகுப்பு. அந்த வகுப்பு முடிந்தவுடன், என் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
என் அம்மாவை சந்தித்து, 'கணக்கு பாடம் நன்றாக செய்கிறான்...' என பாராட்டு மொழி கூறினார். பின், என்னிடம், 'நீ வீட்டுப் பாடம் எழுதவில்லை என்று தெரியும். அதை மறைக்க மேலும் மேலும் பொய் சொன்னாய்... உன்னை பார்த்து மற்ற மாணவர்களும் பொய் சொல்ல பழகி விடுவர். இனி இப்படி செய்யாதே...' என அறிவுரைத்தார். அது என் மனதில் பதிந்தது.
என் வயது, 39; மதுரை ரயில்வே அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிகிறேன். வாழ்வில் ஏற்படும் தவறுகளை ஒப்புக்கொள்ள பழகியுள்ளேன். அதை செயல்முறையாக கற்பித்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- ம.கண்ணன், விருதுநகர்.
