PUBLISHED ON : அக் 08, 2022

கண்டிப்பானவர் சுகிதன்; மரம், செடி, கொடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். வீட்டில் அழகிய தோட்டம் அமைத்திருந்தார். துவக்கப் பள்ளியில் படிக்கும் மகள் முகிலாவுக்கும், மகன் அகிலுக்கும் தோட்டத்தில் மரம், செடி, கொடிகளை பராமரிக்க கற்றுக்கொடுத்திருந்தார்.
வகுப்பு முடிந்து வீடு திரும்பியதும், இருவரும் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவர். களை பிடுங்கி உரம் போடுவர். பணிகளை மேற்பார்வையிட்டு, மண்ணை கொத்தி வளப்படுத்தியபடி உரிய ஆலோசனை வழங்குவார் சுகிதன்.
சில நாட்களாகவே, சில செடி, கொடிகளை மட்டும் பராமரித்து விளையாட ஓடி விடுவான் அகில். முகிலாவும், அவ்வாறே செய்ய ஆரம்பித்தாள். தோட்டம் முறையாக பராமரிக்கப்படவில்லை. அன்று அகிலுக்கு அதிகமாக வீட்டுப் பாடம் தரப்பட்டிருந்தது. வீடு திரும்பியதும் எழுத அமர்ந்து விட்டான். தோட்ட வேலையை கவனித்து திரும்பியவளிடம், ''அக்கா... இன்னிக்கு, ஒருநாள் மட்டும் என் செடிகளையும் கவனித்துக்கொள்...'' என கெஞ்சினான் அகில்.
''அதெல்லாம் முடியாது; உன் செடிகளை பராமரிக்கும் வேலையை நீயே பார்; எனக்கும் வீட்டுப்பாடம் எழுத வேண்டியிருக்கு...'' என்றபடி நோட்டை விரித்தாள். பராமரிப்பு இன்றி காய்ந்தது தோட்டம். இதை கவனித்து விசாரித்தார் சுகிதன். இருவருக்கும் கவனக்குறைவும், ஒற்றுமையின்மையும் ஏற்பட்டிருந்ததை கண்டார். அவற்றை நிவர்த்திக்கும் வகையில், ''தோட்ட வேலையை தனித்தனியே பிரித்து செய்வதை விட, சேர்ந்து செய்வதே சிறந்தது... சில கொடிகள், செடிகளில் படரும்; சில செடிகளை, மரங்கள் தாங்கும்; சில மரங்கள் செடி, கொடிகளை அரவணைக்கும்; இதைப் பார்த்து கூட்டுறவை கற்று கொள்வீர் என்று தானே, தோட்டக்கலையைக் கற்றுத்தந்தேன்...
''இதுவரை நடந்தது போகட்டும்; இனி, இருவரும் சேர்ந்து, தோட்டத்தை வளப்படுத்துங்கள்; கூட்டாக பணியை செய்ய வேண்டும்...'' என அறிவுரைத்தார். கூட்டுறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 'அப்படியே செய்கிறோம் அப்பா...' என்றனர். சோம்பேறித்தனத்தை உதறி, தோட்டத்தை முழுமையாக பராமரிக்க உறுதி எடுத்தனர்.
குழந்தைகளே... ஒரு பணியை இணைந்து செய்தால் சுலபமாக முடிக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
