PUBLISHED ON : ஆக 09, 2019

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில், 2002ல், 10ம் வகுப்பு படித்தேன்; என் வேதியியல் ஆசிரியை இந்துமதி, மிக அற்புதமாக பாடம் நடத்துவார்.
வகுப்பில் அவர் கேட்ட கேள்விக்கு, சரியாக விடை கூறினேன். உடனே, 'நீ புத்திசாலி... உன் அண்ணனும் என்னிடம் தான் படிக்கிறான்; அவன் மக்கு...' என்றார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்; ஆசிரியை சொன்னதை, குடும்பத்தில் அனைவரிடமும் கூறினேன்.
கடும் கோபமடைந்த என் அண்ணன், 'என்னை மக்கு என, மதிப்பிட்டவரிடம் நல்ல மதிப்பெண் வாங்கி காட்டுகிறேன்...' என்று சவால் விட்டான். நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, அரசு ஊழியராக பணி புரிகிறான்.
ஏளனப்படுத்தியதை அவன் சபதமாக ஏற்று, வெறியுடன் படித்து முன்னேறியதை, பின்னாளில் புரிந்து கொண்டேன். எனக்கு, 31 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
என் அண்ணனின் மன உறுதியும், அயராத உழைப்பும் வியக்க வைக்கிறது.
- ராம், பரமக்குடி
