PUBLISHED ON : அக் 29, 2022

''உண்மையை மறைக்காம சொல்லு... வங்கியில் கொள்ளையடித்த பணத்தை எங்கே வெச்சிருக்கிற; உன் கூட்டாளிகள் யார்...''
மிரட்டியபடி கேட்டார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்.
மவுனம் சாதித்தான் ராமு.
''பணத்தை யாரிடம் கொடுத்து வச்சிருக்கே...''
நடுங்கி நின்றவன் பதில் ஏதும் சொல்லவில்லை.
ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ராமு. குழந்தை பருவத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்தான். அவனை மீட்டு, பெயர் சூட்டி வளர்த்தாள், கொள்ளையர் தலைவன் காளியின் மனைவி கமலம்.
அவள் பெற்ற மகன் பெயர் சோமு. தந்தையைப் போல கொள்ளையடித்து வாழ்ந்தான்.
இதனால் வருந்தி நோய்வாய்பட்டாள் கமலம். அவளது இதய அறுவை சிகிச்சைக்காக, பெரும் பணம் தேவைப்பட்டது.
கடினமாக உழைத்து அதற்கு பணத்தை சேர்த்து வந்தான் தத்து மகன் ராமு.
கவலை இன்றி, கொள்ளையடித்து, ஆடம்பரமாக செலவிட்டு வந்தான் பெற்ற மகன், சோமு.
அன்று நள்ளிரவு --
ஒரு வங்கியில் கொள்ளையடித்தான் சோமு. போலீசார் விரட்டி பிடிக்க முயன்ற போது தப்பி தலைமறைவாகி விட்டான். வீட்டிலிருந்த ராமுவை, விசாரணைக்கு அழைத்து சென்றனர் போலீசார். லாக் அப்பில் தள்ளி லத்தியால் அடித்தனர். வலியால் துடித்தவன், கண்ணீர் சிந்தினான்.
அடித்து ஓய்ந்த போலீசார், மதிய உணவுக்காக சென்றனர்.
அப்போது, தட்டு தடுமாறியபடி போலீஸ் நிலையத்துக்கு வந்தாள் கமலம்.
வாடிக் கிடந்த ராமுவை கண்டு துடித்தபடி, ''என் உயிர் காக்க கடுமையாக உழைத்தாய். ஆனால், நான் பெற்ற மகன் செய்த தவறான செயலுக்கு, நீ துன்பம் அனுபவிப்பது கொடுமையாக உள்ளது. எனவே, என் மகனிடம் பேசி கொள்ளையடித்த பணத்துடன் சரணடைய அழைத்து வந்திருக்கிறேன்...'' என கண்ணீர் விட்டாள்.
பக்கத்து அறையில் இதை கேட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் உண்மையை அறிந்தார். உடனே, ராமுவை விடுவித்தார். பின் கமலத்தை அழைத்து, ''அம்மா... அரசு மருத்துவமனையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறேன்...'' என கூறி உடனே செய்தார்.
கொள்ளை வழக்கில் சரண் அடைந்த சோமுவுக்கு தக்க தண்டனை கிடைத்தது.
தண்டனையால் திருந்தி, வீடு திரும்பியவனை வரவேற்றான் ராமு. இருவரும் இணைந்து உழைத்து பணம் சேர்த்து உயர்ந்தனர்.
குழந்தைகளே... உழைப்பில் கிடைக்கும் செல்வத்தில் மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்!
