PUBLISHED ON : மார் 26, 2022

வந்தவாசி, ஆர்.சி.எம்.பள்ளியில், 1966ல், 4ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
அன்று, வகுப்பு இடைவேளையில் தோழி வெண்ணிலா, சில டாலர் பணத்தைக் காட்டி, அவை, ஆசிய நாடான சிங்கப்பூரில் புழக்கத்தில் உள்ளவை என, பெருமைப்பட்டாள். பின், பையில் வைத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில், அந்த டாலர் நோட்டுகளை நைசாக எடுத்து, புத்தகத்தில் மறைத்தான் ஒருவன். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான், இதை பார்த்துவிட்டேன்.
அடுத்து, ஆசிரியர் பெரிய நாயகம் வகுப்பிற்குள் நுழைந்தார். எழுந்து, வணக்கம் செலுத்தி வரவேற்றோம். அவரிடம், சிங்கப்பூர் டாலர் வைத்திருப்பதாக கூறினாள் தோழி. ஆர்வமுடன் அதை காட்டச் சொன்னார். பையை துளாவியவள் காணாமல் அழத் துவங்கினாள்.
அவளை தேற்றியபடி, 'யாராவது தெரியாமல் எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள். திருட்டு பெரிய தீமையை விளைவிக்கும்...' என கண்டிப்புடன் எச்சரித்தார் ஆசிரியர். எடுத்தவன் அமைதியாகவே இருந்தான்.
நடந்த நிகழ்வை ஆசிரியரிடம் எடுத்து கூறினேன். அவன் புத்தகத்தில் மறைத்திருந்த டாலர் நோட்டை, தோழியிடம் கொடுத்து சமாதானப்படுத்தினார். பின், திருடியவன் காதை திருகி, முட்டி போட வைத்தார். என்னை உற்சாகப்படுத்தி, 'வரும் காலத்தில் காவல் துறையில் வேலைக்கு போவாய்...' என வாழ்த்தினார்.
என் வயது, 65; அந்த ஆசிரியர் வாழ்த்தியபடி, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி வழியே செல்லும் போதெல்லாம் அந்த ஆசிரியர் கூறிய வாழ்த்தை எண்ணிக்கொள்கிறேன்.
- ந.செல்வராஜ், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 97900 05436
