தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹிட்லர் - மர்மம் (1)

ஹிட்லர் - மர்மம் (1)

ஹிட்லர் - மர்மம் (1)


PUBLISHED ON : ஜூன் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரணம் என்பது இயற்கை. எந்த மனிதனும், உலகில் பிறந்த எந்த உயிரினங்களும் தப்பவே முடியாத ஒன்று.

ஆனால், உலகையே உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லர், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உத்தம தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போன்றோரின் மரணம் இன்றுவரை சந்தேகத்திற்கு இடமான வகையிலேயே இருந்து வருகிறது.

அவர்கள் உண்மையிலேயே இறந்தார்களா என்பதில் மாற்று கருத்து பரவலாக வருகிறது.

அதிலும் குறிப்பாக, சர்வாதிகாரி ஹிட்லரின் மரணம் குறித்து வேறுவேறு தகவல்கள் இன்றும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது.

ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் சூத்திரதாரியான ஹிட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் ஹிட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற ஹிட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த தகவல். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஹிட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாள ரான ரோஹுஸ் மிஷ். 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். எனவே, அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

இப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

''ஏப்ரல் 30ம் தேதி அன்று பங்கரில் உள்ள அனைவரையும் ஹிட்லர் அழைத்து, 'எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளலாம்' என்றார்.

''இப்படி அவர் சொன்னதால், அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனாக ஆகி விட்டேன். ஹிட்லரும், இவாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவு அப்போதுதான் எடுக்கப்பட்டது. எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனை யைக் கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ.

''முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது சிறந்த வழி என்றார். இதைக் கேட்ட பின்னர் ஹிட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.

''பின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார். நெடு நேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை. ஒரே நிசப்தம்.

''சிறிது நேரம் இடைவெளி யிட்டு ஹிட்லரின் அறையைத் திறந்தோம். நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கு கண்ட காட்சி மனதை உறையச் செய்வதாக இருந்தது.

''ஹிட்லர் பெரிய சோபாவில் ரத்தக் கறையுடன் இறந்து கிடக்க... அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா பிரான் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார்.

''அப்புறம் அங்கிருந்த சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர்!''

ஹிட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபர் மிஷ்தான். ஹிட்லருடன் இருந்து தப்பிய ஒரே நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஹிட்லரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப் பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்க விடப்பட்டு அவ மரியாதை செய்யப் பட்டிருந்தது.

இதனை ஹிட்லர் அறிந்திருந்தார். எனவே, எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால்தான் அவரது மற்றும் இவாவுடைய உடல்களை எரித்துவிடுமாறு ஆணையிட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உண்மை போல உலவவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளும் தருணம் எப்படி இருந்தது என்பதை, அந்தப் பாதாள அரண்மனைக்குள் செவிலியராகப் பணியாற்றிய பெண்மணி எர்னா பிளஜல் என்பவர், சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றே தைரியம் வந்தவராக ஊடகங்களில் பேசியிருக்கிறார்.

அவர் என்ன கூறினார் தெரியுமா?

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us