
விருதுநகர், சத்திரிய வித்யசாலா உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 9ம் வகுப்பு படித்தேன். அப்போது சனிக்கிழமை தோறும் கல்கண்டு இதழ் வெளிவரும்.
அதன் தீவிர வாசகன் நான்; காலையில், பள்ளிக்கு செல்லும் போதே, இதழை வாங்கி விடுவேன். வகுப்பறையிலேயே, ஆசிரியருக்கு தெரியாமல் முழுவதையும் படித்து விடுவேன்.
ஒருநாள், வகுப்பாசிரியர் பால்ராஜ், இதை கவனித்து விட்டார். அந்த இதழை கைப்பற்றி, தண்டனையாக என்னை வெளியே அனுப்பினார்.
மதிய உணவு இடைவேளையில், ஆசிரியர்களின் ஓய்வு அறைக்கு சென்றேன்; என்னிடமிருந்து பிடுங்கி சென்ற இதழை, ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். என்னைக் கண்டதும் சிரித்து விட்டார். பின், 'வகுப்பறையில் இதழ் படித்தது தவறு. இனி அவ்விதம் செய்யாதே...' என, புத்திமதி கூறி இதழை தந்தார்.
தற்போது, என் வயது 80; அந்த சம்பவம் நினைவுக்கு வரும் போதெல்லாம், வகுப்பாசிரியரின் அன்பான முகம், மனதில் தெரிகிறது.
- ஜி.ராஜா, விருதுநகர்.
தொடர்புக்கு: 90477 15160

